
பகவத்கீதை பகுதி 12: மகாபாரதக் கதை
வியாச பகவானின் வானவியல் அறிவு
— முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
வேத வியாஸர் தான் இயற்றியுள்ள மஹாபாரதத்தில் நடக்கும் மாபெரும் போரை வானில் பார்த்துத் தான் எழுதினாரா? வியாஸரின் மஹாபாரதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுனனின் நட்சத்திரமும் பீஷ்மரின் நட்சத்திரமும் அமைந்துள்ளது எவ்வளவு அற்புதமான விஷயம்! நட்சத்திர அதிசயங்கள் வரிசையில் இந்த மர்மத்தைப் பார்க்கலாம்!வியக்க வைக்கும் புதிர் சுலோகம்
மகாபாரதத்தில் ஒரு சுவாரசியமான சுலோகம் பீஷ்ம அர்ஜுன யுத்தத்தின் மர்மத்தையும் வானில் நடக்கும் மஹாபாரதப் பெரும் போரையும் விளக்குகிறது.அர்ஜுனஸ்ய இமே பாணா நேமே பாணா: சிகண்டின:|
க்ருதந்தி மம காத்ராணி மாக மாஸே கவாமிவ||
– மஹாபாரதம் பீஷ்ம பர்வம்
சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் மாசி மாதத்தில் பசுக்கள் எப்படி துன்பம் அடைகின்றனவோ அது போல என்னைத் துன்பம் அடையச் செய்கின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
இந்த சிலேடை செய்யுளின் இன்னொரு அர்த்தம் : சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் தாய் நண்டு குஞ்சு நண்டை பிரசவிக்கும் போது, தன் மரணத்தால் அடையும் துன்பத்தைப் போல என்னைத் துன்பப்படுத்துகிறது என்பதாகும்.
எத்தனை அற்புதமான ஆழ்ந்த பொருளுடைய செய்யுளாக இது அமைந்துள்ளது! ‘மாக மாஸே கவாமிவ’ என்ற சொற்றொடருக்கு மாசி மாதத்தில் பசுக்கள் அடையும் துன்பம் போல எனப் பொருள் கொள்ளலாம். அதையே மாகமா என்றால் தாய் நண்டு என்றும் ஸேசுவா என்றால் குஞ்சு நண்டு என்று பிரித்தும் இன்னொரு பொருள் கொள்ளலாம். தாய் நண்டு பிரசவிக்கும் போது அது மரணமடைகிறது. குஞ்சு நண்டு பிறக்கிறது. அது போல என் வேதனை உள்ளது என்று பீஷ்மர் கூறுவதாக உள்ள சுலோகம் வியாசர் ஒரு மிருக இயல் நிபுணர் என்பதை உணர்த்துகிறது. மேலும் அவர் ஒரு வானவியல் நிபுணர் என்பதையும் நிரூபிக்கும் வண்ணம் இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. பசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவிட்டம்
டெல்பினஸ் என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ச்ரவிஷ்டா அல்லது அவிட்ட நட்சத்திரம் மகர மற்றும் கும்ப ராசிகளில் உள்ளது. இந்தத் தொகுதியில் ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றன. பிரதான நட்சத்திரமாக அவிட்டம் திகழ்கிறது. இதை சீனா உள்ளிட்ட பல தேசங்களும் காளை அல்லது பசு போன்ற தோற்றமுடைய நட்சத்திர மண்டலம் என்று குறிப்பிடுகின்றன. இதில் உள்ள இரு பெரும் நட்சத்திர கணங்கள் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளன என்று அறிவியல் கூறுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரம் இது. இந்த அவிட்ட நட்சத்திரத்தின் அதி தேவதை வசுக்கள். பீஷ்மரின் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர்.
அஷ்ட வசுக்களான தரன், த்ருவன், சோமன், அஹன், அநிலன், அநலன், பிரத்யூஷன், ப்ரபாசன் ஆகியோர் ஒரு முறை மனைவிமார்களுடன் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர். அங்கே இருந்த நந்தினி என்ற காமதேனுவைப் பார்த்த அவர்கள் அதை அடைய ஆசைப்பட்டனர். ப்ரபாசன் என்றும் த்யோ என்றும் அழைக்கப்படும் வசு நந்தினியைக் கவர்ந்தான். அதை அறிந்த வசிஷ்டர் அந்த எட்டுப் பேரையும் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்தார்.
வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பசுவைக் கவர்ந்த தியோ மட்டும் நீண்ட நாள் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஏனைய ஏழு பேரும் உடனே தம் லோகம் திரும்பலாம் என்றும் சாப விமோசனமும் கொடுத்தார். பிரபாசன் அல்லது தியோ என்று அழைக்கப்பட்ட எட்டாவது வசுவே பீஷ்மர்!
அவர் துரியோதனனுடன் சேர்ந்து பஞ்ச பாண்டவரை மஹாபாரத யுத்தத்தில் எதிர்த்தார். 18 நாட்கள் நடந்த யுத்தத்தில் முதல் பத்து நாட்களுக்கு பீஷ்மர் சேனாபதியாக இருந்து உக்கிரமாக போரிட்டார். பத்தாம் நாள் சிகண்டியை முன்னிலைப் படுத்தி அர்ஜுனன் விடுத்த பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தார். முன்பே செய்த பிரக்ஞையின் படி சிகண்டியுடன் போர் புரிய பீஷ்மர் மறுத்து விட்டார். உத்தராயணம் வரும் வரை காத்திருந்து பின்னர் தன் உயிரை விட்டார்.




