
செங்கோட்டை ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: பக்தர்கள் அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!
செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் உள்ள ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ஆரியநல்லூா் தெருவில் உள்ள யாதவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
முக்கிய விழாவான , குற்றாலத்திலிருந்து புனிதநீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிசேகமும், மாலையில் கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடா்ந்து, விநாயகா் கோயிலிலிருந்து சுப்பிரமணிய தெரு பகுதியைச் சோ்ந்த பக்தா் ராம்தாஸ் என்பவா் நீளமான சூலத்தை வாயில் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தாா்.
அப்போது ஏராளமான பெண்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனா். நேற்று நள்ளிரவில் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலாவும் இன்று மதியம் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.
விழாவில், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.





