
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாணிப்பாறை அடிவாரத்தில் குறித்து மதுரை சரக டிஐஜி, இரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாணிப்பாறை அடிவாரத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் மதுரை,விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வனத்துறை, அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரு மாவட்ட கலெக்டர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு பணிகளை ஒதுக்கி இரு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தாணிப்பாறை அடிவாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார்,விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல்,மதுரை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தாணிப்பாறை அடிவாரம், வனத்துறை நுழைவு வாயில், தற்காலிக பேருந்து நிறுத்தம், காவல் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றுப்பாதை, கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டிய இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இதேபோல் மதுரை மாவட்ட திட்ட இயக்குனர் சதீஸ் பாபு, உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து மலைக்குச் செல்லக்கூடிய மலைப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் குடிநீர்,பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

