அட்சய திரிதியை முன்னிட்டு ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் அருள்பாலிக்கும் நிகழ்வான 12 கருடசேவை நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டனர்
கோவில் நகரமான கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுவது 12 கருட சேவையாகும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது இந்த விழா. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் அட்சய திரிதியை தினத்தில் இந்தக் கருட சேவை நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உற்சவப் பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தார்கள். பின்னர் பெரியகடைத் தெருவில் காசி கடைகளுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் எழுந்தருளி 12 கருட சேவைகளும் பகதர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழா பந்தலில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராம சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகபெருமாள், கிருஷ்ண சுவாமி, வரதராஜ பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர் உள்ளிட்ட 12 கோவில்களின் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளினர். பெருமாள் சுவாமிகளுக்கு நேர் எதிரே சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.
இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு பெருமாள் கோஷங்கள் முழங்க தேங்காய் உடைத்து நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.





