
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா 2022.இன்று திங்கள்கிழமை கோலாகலமாக துவங்கி அக்4 வரை நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி(நவராத்திரி விழா), ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டு புரட்டாசி மாத நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி ( திங்கட்கிழமை ) தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சி அம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4 சிவபூஜை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார்.
நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை விளக்கும் வண்ணம் கொலு மண்டபத்தில் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் சிவனின் திருவிளையாடல் கதைகள் சிலைகள், பொம்மைகள் மூலம் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, சங்க பலகை அளித்தது, கால் மாறி ஆடிய படலம், குண்டோதரருக்கு அன்னமிடல், தாகம் தீர்த்தல், மீனாட்சி பிள்ளை தமிழ், மீனாட்சி ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பொற்றாமரை குளம், கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
எனவே பூஜை நேரத்தில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் போன்றவை மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு தான் தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் செய்யப்படும்.
நவராத்திரி விழா நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி மற்றும் 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு , பாரத நாட்டியம் , வீணை இசை கச்சேரி, கார்நாடக சங்கிதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
