
சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலையில் வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாலிகைபுரம் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி 3 ஊழியர்கள் காயம் அடைந்துள்ளனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்துள்ள 3 ஊழியர்களில் ஒருவருக்கு 60 சதவீதம் தீக்காயமும், 2 பேருக்கு 40 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகம் வரும் அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை மாளிகப்புரம் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியரிடம் தேவஸ்வம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவசர அறிக்கை கேட்டுள்ளார்.
இந்த விபத்தில் 3 ஊழியர்கள் பலத்த காயமடைந்ததால் சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் அமைச்சர் பரிந்துரை செய்தார்.
அங்கிருந்த உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் அமைச்சர் பேசினார்.
விபத்து நடந்த உடனேயே காயமடைந்தவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
