திருப்பாவை பாசுரம் 16 : நாயகனாய் நின்ற…

Published:

thiruppavai pasuram 16 - 2026

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாழ்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

thiruppavai16 - 2026

விளக்கம்

பதினைந்தாம் பாசுரத்தில் சோம்பல் அறுத்து, கண்ணனைப் பாடுவதற்காக விரைந்து எழுந்துவா என்று தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், கண்ணனின் திருமாளிகை வாயில் காப்பவனிடம் கதவைத் திறந்துவிடுமாறு வேண்டுகிறார். நாயகனாக, எங்களுக்கு சுவாமியாகத் திகழ்கின்ற நந்தகோபருடைய திருமாளிகையைக் காப்பவனே!

கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கப் பெற்ற வாசலைக் காக்கின்றவனே! திருமாளிகையில் காப்பாகத் திகழும் அழகிய மணிக்கதவின் தாழ்ப்பாளை நீ திறக்க வேண்டும். இளமையுடன் திகழும் இடைப் பெண்களாகிய எங்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. ஆச்சரியப்படத் தக்க செயல்களைச் செய்யும் மாயன் அந்தக் கண்ணன். நீலமணியைப் போன்ற நிறத்தை உடைய திருமேனியைக் கொண்டவன் கண்ணன்.

நாங்கள் விரும்பும் பறையை, எங்களின் ஆசை வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக நேற்றே எங்களுக்கு வாக்களித்தான் கண்ணன். எனவே அந்தப் பெருமான் துயில் கலைந்து எழ, பாடி எழுப்புவதற்காக நாங்கள் வந்தோம். எங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு அடியோங்கள் வந்திருக்கிறோம். ஸ்வாமி! முதல் முதலிலே உங்களது திருவாயினால் எங்கள் வேண்டுகோளை மறுக்காது செய்ய வேண்டும். கண்ணபிரானின் மீது பரிவு கொண்டிருக்கும் நிலையை உடைய கதவை நீங்கள் நீக்கி அருள வேண்டும்.. என்று கேட்கிறார்கள் இந்தப் பெண்கள்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

விளக்கவுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img