ஐந்தாம் பாசுரம் : யமுனைத்துறைவன்…. கம்ஸன் பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!
யமுனைத்துறைவன் என்று கண்ணனை வெளிப்படையாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இங்கு ஸ்ரீ பட்டர் தெரிவிக்கிறார். அதாவது… கம்ஸன், கண்ணன் இருக்கும் இடத்தை தேடிக் கொண்டிருக்கிறான். அதை வெளிப்படையாகச் சொன்னால் ஆபத்து. அதனால், பொதுவாக மறைமுகமாக யமுனைத்துறைவன் என்று சொன்னதாக ஸ்ரீ பட்டர் திருவுள்ளம்.
இங்கு அத்தத்தில் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் என்று திருவோணமும் சரி, ரோகிணியும் சரி, ஹஸ்த நட்சத்திரத்துக்கு முன்னும் பின்னும் பத்தாவது நட்சத்திரமாக வருவதால் அங்கும் இப்படி பொதுப்படையாகச் சொன்ன ஸ்ரீ பெரியாழ்வார் வார்த்தை இங்கு நினைக்கத்தக்கது
தாமோதரனை… பணைகளால் தாவினவாறே உடைநழுவ தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள். அத்தழும்பு தோன்றாமைக்காக நம்பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது என்று ஸ்ரீ நஞ்சீயர்.. அருளிச்செய்தது – ஆறாயிரப்படி பொருள்.
அதாவது கண்ணபிரானை யசோதைப்பிராட்டி உரலில் கட்டிய தழும்பு இடையில் உண்டானதால் தாமோதரன் என்று ஆயிற்று (தாமம்..கயிறு; உதரம்..வயிறு). அதை மறைக்க கண்ணன் மேலாடை இட்டுத் திரிவான். ஆயினும், அது மரம் ஏறுகையில் நழுவும்போது இடைச்சியர்கள் அதைக் கண்டு நகைப்பார்கள். இதனாலேயே, ஸ்ரீ நம்பெருமாளுக்கு இடையில் தழும்பு தெரியாமல் இருக்க மேல் சாத்து சாத்துவார்கள் என்று ஸ்ரீ நஞ்சீயர் வார்த்தை.
- வானமாமலை பத்மநாபன்