44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம் பத்தாவது சுற்று – 08.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா A ஆண்கள் அணி இன்று பத்தாவது சுற்றில் இரான் அணியோடு விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. விதித் குஜராதி, எஸ்.எல். நாராயணன் இருவரும் வெற்றி பெற்றனர். எரிகைசி அர்ஜுன் தனது ஆட்டத்தை ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். ஹரிகிருஷ்ணா தோல்வியுற்றார்.
இந்தியா B ஆண்கள் அணி இன்று உஸ்பெஸ்கிஸ்தான் அணியுடன் விளையாடி 2-2 என்ற கணக்கில் போட்டியைச் சமன் செய்தது. பிரக்ஞானந்தா தோல்வியுற்றார். குஹேஷ் இன்று தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். சரின் நிஹாலும் அதிபனும் ட்ரா செய்தனர்.
இந்தியா C ஆண்கள் அணி ஸ்லோவாகியா அணியோடு விளையாடி, 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது. அபிமன்யு வெற்றி பெற்றார். கங்குலியும் கார்த்திக் முரளியும் ட்ரா செய்தனர். சேதுராமன் தோல்வியடைந்தார்.
இந்தியா A பெண்கள் அணி கசகஸ்தான் அணியுடன் விளையாடி 3.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியடைந்தது. இந்திய அணியில் வைஷாலி ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். கோனேரு ஹம்பி, தானியா சச்சதேவ், பக்தி குல்கர்ணி ஆகிய மூவரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர்.
இந்தியா B பெண்கள் அணி நெதர்லாந்து அணியுடன் விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்திய அணியின் பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா ஆகிய மூவரும் இன்று வெற்றி பெற்றனர். வந்திகா தோல்வியடைந்தார். இந்தியா C பெண்கள் அணி ஸ்வீடன் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. நந்திதாவும் ப்ரத்யுஷாவும் வெற்றி பெற்றனர். ஈஷாவும் வர்ஷிணியும் ட்ரா செய்தனர்.
ஆண்கள் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆர்மேனியா 17 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியா B அணி 16 புள்ளிகளுடனும் இந்தியா A அணி 16 புள்ளிகளுடனும் முறையே மூன்று, நான்காம் இடத்தில் உள்ளன.
இந்தியா C அணி 13 புள்ளிகளுடன் 28ஆவது இடத்தில் உள்ளது. பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், இந்தியா C அணி 15 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் இன்னும் பதக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.