T20 WC 2026: பாகிஸ்தானுக்கு எதிராக தொடரும் இந்திய அணியின் வெற்றி பயணம்!

Published:

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி | ஒன்பதாம் நாள் 15.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இன்று (15.02.2026) முதல் ஆட்டம் காலை 0700 மணிக்கு மும்பை வான்கடெ மைதானத்தில் நேபாளம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயும் இரண்டாவது ஆட்டம் காலை 1100 மணிக்கு சென்னையில் நமீபியா, அமெரிக்க அணிகளுக்கு இடையேயும் மூன்றாவது ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயும் நடைபெற்றது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி எளிதில் வெற்றி

          பூவாதலையா வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த நேபாள அணியில் தீபேந்திர சிங் ஐரீ (47 பந்துகளில் 58 ரன்) மட்டும் சிறப்பாக ஆடினார். பிறர் மே.இ. தீவுகள் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சரியாக விளையாடாததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 133 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய மே.இ. தீவுகள் அணியில் பிராண்டன் கிங் (17 பந்துகளில் 22 ரன்), ஷாய் ஹோப் (ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 61 ரன்) மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் (ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 46 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடியதால் மே.இ. தீவுகள் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 134 ரன் எடுத்து எளிதில் வெற்றி பெற்றாது. நான்கு விக்காட்டுகள் எடுத்த மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

சென்னையில் அமெரிக்க அணி வெற்றி

          பூவாதலையா வென்ற அமெரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அதனால் முதலில் வந்த அந்த அணியில்முதல் ஐந்து மட்டையாளர்கள்  மொனாங்க் படேல் (52 ரன்), ஷயான் ஜஹாங்கீர் (22 ரன்) முக்கமாலா (17 ரன்), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (68 ரன்) மிலிந்த் குமார் (28 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த நமீபிய அணியில் ஸ்டீங்கேம்ப் (58 ரன்), ஸ்மிட் (31 ரன்), ஜான் நிக்கோல் (28 ரன்) ஆகியோர் நன்றாக ஆடியபோதும் ரன்ரேட் போதிய அளவிற்கு உயரவில்லை. அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 168 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிப் பயணம் தொடர்கிறது

          பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இந்திய அணி மட்டையாட வந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா முதல் ஓவ்வரிலேயே ஆட்டமிழந்தார். அதன் பின்னர் திலக் வர்மா (25 ரன்) உடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் (40 பந்துகளில் 77 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்). இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த இந்திய மட்டையாளர்களை பாகிஸ்தான் அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் அதிரடியாக ஆடவிடாமல் முடக்கினர். இதனால் சூர்யகுமார் யாதவ் (32 ரன்), ஷிவம் துபே (27 ரன்), ஹார்திக் பாண்ட்யா (பூஜ்யம்), ரிங்கு சிங் (11 ரன்) ஆகியோர் நன்றாக ஆடியபோதும் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. தொடக்கத்தில் 14 என இருந்த ரன்ரேட் முடிவில் 8.75 எனக் குறைந்துவிட்டது. பாகிஸ்தான் அணி 5 சுழல்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

          இரண்டாவதாக் ஆடவந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரில் (ஷாஹிப்சாதா ஃபர்ஹான்) ஒரு விக்கட், இரண்டாவது ஓவரில் (சயீம் அயூப், சல்மான் ஆகா) இரண்டு விக்கட்டுகள், ஐந்தாவது ஓவரில் (பாபர் ஆசம்) ஒருவிக்கட் என பவர் பிளே ஓவர்களுக்குள் நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தன. இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். ஹார்திக் பாண்ட்யா, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். குல்தீப் யாதவ், திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டார்.

          குரூப் A பிரிவில் இந்திய அணி சூப்பர் 8 கட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறது. தற்போதைய நிலையில் அமெரிக்க நாலு ஆட்டங்கள் முடிவில் 4 புள்ளிகளும், பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் முடிவில் 4 புள்ளிகளும் பெற்றுள்ளன.  வருகின்ற 18ஆம் தேதி பாகிஸ்தான் அணி நமீபிய அணியோடு விளையாடும். அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் சூப்பர் 8 கட்டத்திற்கு தகுதிபெறும். அதே 18ஆம் தேதி இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

          நாளை (16.06.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மதியம் 0300 மணிக்கு, இங்கிலாந்து இத்தாலி அணிகளுக்கிடையே நடைபெறும். மூன்றாவது ஆட்டம் பல்லகலேயில் இரவு 0700 மணிக்கு ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும்.

Related articles

Recent articles

spot_img