ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி, சென்னையின் எஃப்சி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
ஐ.எஸ்.எல் நான்காவது சீசனின் இறுதிப்போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. சென்னை எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3-2 என வென்றது. இந்த ஆட்டத்தில் 9வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். பின் சென்னை வீரர்கள் விறுவிறுப்பாக விளையாடினர். 17வது நிமிடத்தில் சென்னை வீரர் மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். 45வது நிமிடத்தில் மெய்ல்சன், மீண்டும் ஒரு கோல் அடித்த்டார்.
முதல் பாதியில் இரண்டுக்கு ஒன்று என முன்னிலை பெற்ற சென்னை அணி, இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. 67வது நிமிடத்தில் சென்னை வீரர் ராபெல் அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். கடைசிக் கட்டத்தில் பெங்களூரு மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால், மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் பெங்களூரை வீழ்த்திய சென்னையின் எஃப்சி அணி, இரண்டாவது முறையாக ஐ.எஸ்.எல் கோப்பையைக் கைப்பற்றியது.