ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளது. பைனலில் இந்தியாவை நாளை எதிர்கொள்ள உள்ளது வங்கதேசம். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இத்தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை எளிதில் பறிகொடுத்தனர். பின்னர் வந்த முஷ்பிகுர் ரஹிம் முகமது மிதுனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இறுதியில் அந்த அணி 48. 5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 99, முகமது மிதுன் 60 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் 4 விக்கெட்டும் ஷாகின் அப்ரிதி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. வங்கதேச அணி பந்துவீச்சில் அனல் பறந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசிப் அலி 31 ரன்னும், அனுபவ வீரர் சோயிப் மாலிக் 30 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
வங்கதேச அணி சார்பில் முஸ்தபிஷூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 99 ரன்கள் விளாசிய முஷிஃபிகுர் ரஹிம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தோல்வியை அடுத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது வங்கதேசம் .




