திருச்சி உறையூரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமடைந்தன.
திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் அருகே உள்ள தெற்கு வெள்ளாளர் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக பலர்குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா இல்லாமல் வசிப்பதாக அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் புகார் தெரிவித்து வந்ததாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று குடிசை வீட்டில் திடீரென தீ பற்றியது. தீ மளமளவென பரவியதில் அருகில் இருந்த 5 குடிசை வீடுகளும் எரிந்து சேதமாகின. குடிசை வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அகற்றதான் இவ்வாறு மர்ம நபர்கள் தீ வைத்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உறையூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதே பகுதியில் ஒரு வீடு தீ பிடித்து எரிந்த நிலையில் இன்று 5 வீடுகள் தீயில் கருகியது இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.