
திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் (35), இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் கோட்டச் செயலாளராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை இரவும் வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் மோகனின் கார் தீப்பிடித்து எரிவதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரிக்கின்றனர். இதனிடையே, இந்து முன்னணி நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரவியதை அடுத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மோகன் வீட்டு முன்பாகத் திரண்டனர்.

மேலும், காருக்குத் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி புதன்கிழமை காலை 8.40 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


