முந்தைய கால கட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு காலத்தில் அவர்களை ஒதுக்குப்புறத்தில் தங்க வைப்பது கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அது காலப் போக்கில் மாறி இப்போது அத்தகைய நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. ஆனால், மதுரைக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாதவிலக்கு காலத்தில் பெண்கள் ஒதுக்குப்புறத்தில் உள்ள அறை ஒன்றில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூவலபுரம் என்னும் கிராமத்தில் மாதவிலக்கு நாட்களில் பெண்கள் அவரவர் வீட்டில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் பெண்கள் தங்குவதற்கு ஊருக்குச் சற்று தள்ளி இரண்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த அறையில் தான் பெண்கள் தங்க வேண்டுமாம். அங்குத் தங்கும் பெண்களின் பயன்பாட்டிற்காக மரத்தில் கட்டப்பட்டுள்ள பை ஒன்றில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமின்றி அந்த கிராமத்திற்குச் செல்லும் பெண்களுக்கும் தான். ஒதுக்குப்புறத்தில் இருக்கும் பெண்களைப் பார்ப்பதற்காகச் செல்பவர்கள் குளித்து விட்டுத் தான் அவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டுமாம்.
இதனைத் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் பல தலைமுறைகளாகப் பின்பற்றி வருவதாகவும் இது இயல்பான ஒன்று தான் என்றும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களைத் தள்ளி வைக்கும் நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கத்தை விட்டு நீங்கிய நிலையில், இன்னும் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.