மதுரை: பட்டா மாறுதல் பெறுவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. மதுரையைச் சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயலர் ஓ. பரமசிவம் இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. ஓ.பரமசிவம் தாக்கல் செய்த மனுவில்… தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்து உரிமை மாற்றம் தொடர்பாகப் பதிவு செய்யும்போது, நிலத்தை அளவீடு செய்யவும், நிலத்தை வாங்குபவர் பெயரில் பட்டா மாறுதல் செய்யவும் உரிய கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இரு பணிகள் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகும்போது அவற்றுக்குத் தனியாக கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஒரே பணிக்கு 2 முறை கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு, பத்திரப் பதிவுத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டா மாறுதல் பெற வருவாய்த் துறையில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், அசையா சொத்துப் பதிவின்போது நில அளவீடு, பட்டா மாறுதலுக்கு உரிய கட்டணத்தை சார்-பதிவாளர்கள் வசூலித்து விடுவதால், வட்டாட்சியர் அலுவலகங்களில் மீண்டும் அதற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
பட்டா மாறுதலுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது: வருவாய்த் துறைக்கு உத்தரவு
Popular Categories


