
பதவி ஏற்ற பின் முதல்முறையாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நான்கு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.
27ம் தேதி முதல் சென்னை திருப்பூர் கோவை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 30ம் தேதி மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார்.திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் உடனடியாக பதவி பிரமானமும் செய்து வைக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற முதல் முறையாக அவர் 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
வருகிற 27ம் தேதி சென்னைக்கு வரும் அவர், தனது வீட்டில் தங்குகிறார். பின்னர், சென்னையில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். பாஜவினரும் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, 28ம் தேதி கோவை செல்லும் அவர், அங்கும் அவருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் பேரூர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 29ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் செல்கிறார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் 30ம் தேதி மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி முன்கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது





