
டிஏபிஎஸ் – உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – டிஏபிஎஸ் என பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தை ஜன.3ல் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதை அடுத்து, தமிழக அமைச்சரவை இந்த திட்டத்துக்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அடுத்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, வரும் நிதியாண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டதும் போராட்டத்தை பெரும்பாலான ஆசிரியர்கள் கைவிட்டனர். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர்.
முன்னதாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திமுக., தனது தேர்தல் வாக்குறுதியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின், வழக்கம்போல் அதைக் கிடப்பில் போட்டு விட்டது. நான்கே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வரும் நிலையில் மீண்டும் அதே பல்லவியை தூக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய நிலையில் திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் பெரும் கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருந்தனர். இதனால் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்த அவர்கள், ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தங்கள் வாக்குறுதிக்கு மாறாக இப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அம்சங்கள் புதிய திட்டத்தில் இருப்பதாக அரசு தெரிவித்தது. இந்தப் புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி…
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியை தமிழக அரசு ஏற்கும்.
50 % உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 % குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழக முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அள்ளிக் கொடுப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது தங்களை ஏமாற்றம் செயல் என்று அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் உள்ள குமுறலில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
தங்களது பணத்தை தங்களுக்கு தராமல் அரசு எடுத்துக்கொண்டு ஏமாற்றுவதாக அவர்கள் கணக்குகளை வெளியிட்டனர். எனினும் ஜாக்டோ ஜியோ நம்பி தங்கள் எதிர்காலத்தை இழந்து விட்டதாக பலரும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.
அரசு அள்ளிக் கொடுக்கிறதா? வாரிச் சுருட்டுகிறதா?
இந்நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் உள்ளக் குமறலை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதள பதிவு ஒன்று வைரலானது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…
மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் வழங்கப்படும்.
CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது.. நாம் செலுத்திய 10% அரசு செலுத்திய 10% இதற்கு வட்டி 8% எல்லாம் சேர்த்து, சுமாரா ரூபாய் ஒரு கோடி கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனி இல்லை.
தமிழ்நாடு அரசு சிறப்பு பென்ஷன் திட்டத்தின் படி, 60 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் 61ம் வயதில் இறந்தால் அந்த ஓராண்டில் சுமாராக 6 லட்சம் (மாதம் 1 லட்சம் என வைத்துக் கொண்டால்) பென்ஷன் வாங்கி இருப்பார். பழைய CPS திட்டத்தில் நீடித்திருந்தால் ஒரு கோடி ரூபாய் கையில் வைத்திருக்கலாம்.
உங்களை எல்லாம் ஏமாற்றுவது மிகவும் எளிது.
என் பனிக்காலத்தில் என்னுடைய சம்பளத்தில் 10% மட்டுமே பிடித்தால் அரசு பங்களிப்பு + வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் வரும். ஒரு கோடி ரூபாய் அரசு வைத்துக் கொண்டு எனக்கு மாதம் ஒரு லட்சம் பென்ஷன் தரும். இது விபூதி அடிக்கும் வேலை.
ஒவ்வொரு ஊழியரும் CPS Account slip ஐ வச்சுக்கிட்டு, இவ்வளவு பணம் சேர்ந்துருக்கு, அவ்வளவு பணம் சேர்ந்துருக்கு… ஓய்வு பெறும் போது லம்ப்பா கிடைக்கும் என்று இனிமேல் உதார் விட முடியாது .
60 ம் வயதில் ஓய்வு பெற்று, பெரும்பாலானவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மண்டையை போட்டு விடுவார்கள். எனவே அரசுக்கு கொழுத்த லாபம் வரும். இது IAS படிச்சவனுக்கு தெரியாதா ?
இப்பவும், எனக்கு CPS போதும்; அரசு தரும் பென்ஷன் வேண்டாம் என்று முடிவு எடுக்க ஒரு ஆப்ஷன் கொடுத்தால் CPS – ஐ தேர்ந்தெடுப்பவன் தான் புத்திசாலி.
இன்று வரை ஊழியர்கள் CPS க்கு கட்டிய சந்தா தொகையை, அப்படியே GPF அக்கவுண்டில் மாற்றி விடுகிறேன். அதற்குரிய வட்டியும் கணக்கில் சேர்த்து விடுகிறேன். அரசாங்கம் போட்ட காண்ட்ரிபியூஷனை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். என்று சொல்லி, இதே பென்சன் ஸ்கீம் அறிவித்திருந்தால், சங்கங்கள் ஜெயித்ததாக அர்த்தம்.
இப்போ உங்களுக்கு நேந்திரம் வாழைப்பழத்தை சாலட் போட்டு கொடுத்திருக்காங்க என்று தான் எனக்கு தோன்றுகிறது. உங்க பணத்தை அரசாங்கம் தன் கணக்குக்கு மாற்றி விடும். அதிலிருந்து மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து போன்றவைக்கு அப்பணம் செலவிடப்படும்.
100% ரிசல்ட், ஆவரேஜ் மார்க் பிக்கப், இல்லம் தேடி கல்வி, திறன்… இப்படி புதுசு புதுசா 10 ஸ்கீம் கொண்டு வந்து பிரஷர் ஏத்தினம்னா சர்வீஸ்லயே பாதிப்பேர் செத்துப் போயிருவான். பென்ஷன் தரத் தேவை இல்லை. நேரடியா ஃபேமிலி பென்ஷனை கொடுத்து விடலாம். அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம்.
*எலிப் பொறியில் மசால் வடை வைச்சாச்சு. ஆபத்தை அறியாமல் எலி வந்து கடிச்சிருச்சு. இனி ஊர்ல இருக்குறவன் எல்லாம் ‘இவருக்கென்னப்பா பென்ஷன் வந்துருச்சு’ என்று வயிறு எரிஞ்சு பேசுவானுங்க. வரவிருந்த ஒரு கோடியை விட்டுட்டு, கடைசியா வாங்குன Basic pay ல, பாதியை அதாவது 50,000 ஐ பென்ஷன்கற பெயரில் வாங்கனும். பணி ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அசல் கிடைக்கும்.
ரூபாய் ஒரு கோடியை வங்கியில் டெபாசிட் செய்தாலே ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம். வாங்க போற பென்ஷன் என்பது வட்டி மட்டுமே. அசல்?….
அரசு ஊழியரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் வட்டி அரசு தரும். அந்த அரசு ஊழியர் இறந்த பிறகு அவருடைய மனைவிக்கு அதில் 60% தரும். அவருடைய மனைவியும் இறந்த பிறகு அரசு அப்படியே அந்த ஒரு கோடி ரூபாயை ஆட்டைய போட்டுவிடும். அரசு ஊழியரின் மனைவி அரசு ஊழியருக்கு முன்பே இறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம்.
இதுதான் புதிய பென்சன் திட்டத்தின் சிறப்பு திருநெல்வேலி அல்வா. இதற்காகத்தான், அரசுக்கு ஆதரவாக, அரசின் வருமானத்தை உயர்த்த, சங்கங்கள் இதுநாள் வரை நடத்திய நாடகம். இப்ப அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு ஆதரவாக திருப்பியதற்கான சன்மானத்தோடு, நன்றி அறிவிப்பு கூட்டங்கள் இனிதே நடக்கும்.
சங்கங்களை நம்பிய ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இன்று சவப்பெட்டியில் அடைத்த தினம். அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் இன்றைய தினம் கருப்பு நாள்.




