தனி தகவல் திருட்டு காரணமாக கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை இன்னும் 10 மாத கால இடைவெளியில் நிரந்தமாக மூடப் போவதாக கூகுள் நிறுவனம் தனது வலைப்பூவில் அறிவித்துள்ளது.
கூகுள் இது குறித்துக் குறிப்பிட்டபோது, கூகுள் ப்ளஸ் மிகவும் குறைவான நபர்களால் பயன்படுத்தப் படுவதாகவும், பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளது. கூகுள் ப்ளஸ் சேவையை பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் பேர், ஐந்து நொடிகளுக்கும் குறைவாகவே அதனை பயன்படுத்துகின்றார்களாம். இருப்பினும், வர்த்தக பயனர்களின் பயன்பாட்டுக்காக தொடர்ந்து கூகுள் பிளஸ் செயல்பாட்டை வைத்திருக்கவும், நிறுவனத்துக்குள்ளான உரையாடலுக்கு இந்த பயன்பாட்டை தொடர்ந்து கொடுக்க யோசித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தில் தொழில்நுட்ப தகவல் பிழை காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் தகவல் திருடப்பட்டதாம். இதனை ஒப்பு கொண்ட கூகுள் நிறுவனம் திருடப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றது. இதைத் தொடர்ந்து இன்னும் 10 மாத இடைவெளியில் கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளதாக வலைப்பூ – ப்ளாக் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.