ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வர். கடந்த வாரம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. குறிப்பாக கடந்த 18ஆம் தேதி காலை 6.00 மணி நிலவரப்படி 28,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து குறைந்துள்ளதால் படகுகளை இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஒகேனக்கல்லுக்கு வருகை புரியும் நிலையில், தடை நீக்கப்பட்டுள்ளது அவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா இடமான ஒகேனக்கல் அருவி தமிழ்நாட்டின் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.






