அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், அங்கிருந்த வர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த காவல்துறையினர் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஃப்ளோரிடா மாகாண ஆளுநரை தொடர்பு கொண்ட அதிபர் ட்ரம்ப், விரிவான அறிக்கை கேட்டுள்ளார். மேலும், பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பள்ளிகளில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், அதில் மாணவர்கள் அதிகம் பேர் உயிரிழப்பதும் பெரும் கவலை தரும் விஷயமாக உள்ளது. இதற்காக அரசு நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இதுபோன்ற துயர சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.