இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இலங்கை அரசு முனைப்புக் காட்டி வருகிறது. 19–வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுராகுமார திசநாயகே செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, இலங்கையில் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளில் அதிபர் மைத்ரீபால சிறீசேனா தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் 19–வது இலங்கை அரசமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் வசம் குவிந்துள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு வலிமை சேர்க்கும் பிரிவுகள் இந்த சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றுள்ளன. அதிகார வர்க்கத்தின் தலையீடின்றி சுதந்திரமாக செயல்படும் வகையில் ஆணையங்களை அனுமதிக்கவும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும். இந்த சட்டத் திருத்த மசோதா அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது – என்று அவர் கூறியுள்ளார்.

