புதுதில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 370- ஐ நீக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது. மாநிலங்களவையில், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கும் நோக்கம் அரசுக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சௌத்ரி, “ மத்திய அரசிடம் தற்போது அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. இந்த சட்டப் பிரிவு மூலம் மத்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீர் அரசின் இசைவுடன் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைப் பெறுகிறது’ என்று தெரிவித்தார்.

