அமெரிக்காவில் உள்ள எச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். காரணம் எச்-1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. அமெரிக்காவில், இப்போதுள்ள சட்டத்தின்படி எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைவர் (கணவர் அல்லது மனைவி) வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்த மாற்றம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் வரப் பிரசாதம்தான். இந்தப் புதிய முறைப்படி முதல் ஆண்டில் பணி செய்ய அனுமதி கேட்டு 1,79,600 பேர் விண்ணப்பம் செய்ய தகுதி பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் 55 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் (கணவன் அல்லது மனைவி) வேலை அடிப்படையில் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று வேலை விசா வழங்கப்படும். வரும் மே 26-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இந்த ‘ஐ-765 விண்ணப்பம்’ யுஎஸ்சிஐஎஸ் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைவருக்கு வேலை அனுமதி அட்டை (எச்-4) வழங்கப்படும். அதன்பிறகு அவர்கள் அமெரிக்காவில் பணி புரியலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க எச்1பி விசா வைத்திருந்தால் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி கிடைக்கும்!
Popular Categories


