புதுதில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க் கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்னை குறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘நான் எப்போதுமே சரியான தகவல்களைக் கூறுகிறேன். அதுதான் எனக்கு பிரச்னையாக உள்ளது. நான் எந்த சூழ்நிலையிலும், எதிர்கட்சிகள் குறித்து தவறான, அவதூறான கருத்துக்களை கூறவில்லை,’ என்று விளக்கமளித்தார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது, பின்னர், மீண்டும் பகல் 11:45 மணிக்குத் துவங்கியது. அப்போது, வெங்கய்ய நாயுடு, ‘நான் எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தனிப்பட்ட நபர்களையோ குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாக அரசியல் நிலை குறித்துதான் பேசினேன்…” என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, மக்களவையில் வழக்கமான நடவடிக்கைகள் துவங்கின.

