
சென்னை:
நான்கு இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தைப் பறித்துக் கொண்டு பின்னர் கழற்றிவிட்டு ஏமாற்றிய பெண், 4வது கணவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் சீனிவாசன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘கோவையைச் சேர்ந்த காயத்ரி என்ற பி.எஸ்.சி. பட்டதாரி பெண்ணை கடந்த 2014 நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு அவளது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் இருந்து நகை பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டு, பின்னர் என்னை மணந்து கொண்டது எனக்குத் தெரியவந்தது. தற்போது 5–வதாக இன்னொரு இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்து வருகிறாள். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி, வழக்குப் பதிவு செய்து காயத்ரியைப் பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது. அவள், இணைய தளங்களில் வரன் தேடி வசதியான இளைஞர்களைத் தனது வலையில் வீழ்த்தி அவர்களைத் திருமணம் செய்துகொண்டு, நகை பணத்தை அபகரித்த பிறகு அவர்களைக் கழற்றி விடுவதும் தெரியவந்தது.
இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்ஷா, சுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயர்களில் மாற்றி மோசடி செய்திருக்கிறாள்.
காயத்ரி 2010–ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்திருக்கிறாள். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தைப் பறித்துவிட்டு விவாகரத்து பெற்றுவிட்டாள்.
பின்னர் 2012–ம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்திருக்கிறாள். இவரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் பெற்று விட்டு, விவாகரத்து வழக்கினைத் தொடர்ந்திருக்கிறாள். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் 2013–ம் ஆண்டு கோவில் பூசாரி ராஜகோபால் என்பவரைத் திருமணம் செய்ய முயன்று, ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகையை அபகரித்திருக்கிறாள். இதன் பிறகு காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தியிருக்கிறாள். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாகக் கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றைப் பெற்றிருக்கிறாள். மேலும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி அனுபவித்திருக்கிறாள்.
அதன் பிறகு அம்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை தனது திருமண வலையில் வீழ்த்தியிருக்கிறாள். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது. இதை அறிந்த சீனிவாசன் திருமங்கலம் போலீசில் புகார் செய்ததால், விசாரணை செய்த போலீஸார் தற்போது காயத்ரியை கைது செய்துள்ளனர்.


