அமெரிக்காவில் கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஒரு பாதிரியார். அவர், ‘தான் கடவுளின் மனிதன்’ என்று கூறி அந்தச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவானாராம். அவரை காவல்துறையினர் பிரேசிலில் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் மின்னிபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதியில் கிறிஸ்துவ மத தொண்டூழியம் செய்ய வரும் இளம் பெண்களுக்கான கன்னியாஸ்திரி முகாம் உள்ளது. இதனை பாதிரியார் விக்டர் அர்டன் பெர்ணார்ட் என்பவர் நடத்தி வந்தார். 53 வயதான அவர், அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை ஒன்பது ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். ‘நான் கடவுளின் மனிதன்; என்னுடன் இருந்தால் உங்களின் கன்னித் தன்மை பாதிக்காது’ என்று கூறி அவர் அந்தச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தாராம். இவ்வாறு அந்தப் பெண்கள் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென தலைமறைவானார். அவரை அமெரிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த அவர், பிரேசில் நாட்டில் உள்ள ப்ரையாடா பிப்பா கடற்கரைப் பகுதியில் ஒரு பங்களாவில் தங்கியிருந்தபோது, அவரை பிரேசில் காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் இருந்த 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர்கள் விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியார் கைது
Popular Categories



