சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இலங்கை, கண்டி நகரில் திங்கட்கிழமை இன்று காலை போராட்டம் நடத்தப் பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் வலுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அது இன்னும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை கண்டி நகரில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாகவும், அவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று மூன்றாவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கண்டிக்கு சென்றுள்ளதுடன், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்ன தேரரை சந்தித்தனர். இதை அடுத்து, தற்போது அதுரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கண்டியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கண்டியில் வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் எனவே கண்டியில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிபர் மைத்ரீபால சிறீசேனவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, கண்டி தலதா மாளிகைக்கு முன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக இன்று காலை 9 மணி முதல் வவுனியா கண்டி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன் சிலர் ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளனர். இது போல் பல்வேறு இடன்களிலும் போராட்டங்கள் தலைதூக்கியுள்ளதால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கண்டி நகர் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கே மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.