
பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது; மிக ஆபத்தானது.!
நீதிமன்றங்களின் எல்லையை மீறி வழங்கப்பட்ட தீர்ப்பு.!
நேற்று வெளியிட்ட காணொளியின் முக்கிய சாராம்சங்கள்:
தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவற்றிற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த பத்து மசோதாக்களில் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக இருக்கக்கூடிய ஆளுநர்களை நீக்கி தமிழ்நாடு முதலமைச்சர் வேந்தர்களாக இருப்பார்கள் என்பதுதான் பெரும்பாலான மசோதாக்களாக இருக்கின்றன.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பிற துறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் வந்து விடுகிறது. ஒன்றே ஒன்று பல்கலைக்கழகங்கள் மட்டும் ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இப்பொழுது ஆளுநர்களை முற்றாக நீக்கி விட்டு அவர்களுடைய அதிகாரத்தை எடுத்து, அதிலிருந்து நீக்கிவிட்டால் ஆளுநர்கள் தற்போது வெறும் பொம்மை அளவிற்கு செயல்படும் நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான சட்டம் எப்படிப் பொருந்தும்? இது போன்ற சிக்கல்களை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.
பல மசோதாக்களுக்கு கால தாமதம் ஆகிறது என்பது உண்மைதான். காலதாமதத்தை ஆளுநர்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மாநில அரசால் நிறைவேற்றக்கூடிய அனைத்து விதமான மசோதாக்களுக்கும் ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதைப் போன்ற ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது சரியானது அல்ல; மிகவும் விசித்திரமானது.
இந்தியா என்ற ஒரு நாடு. இந்தியத் தேசத்தை முன்னிறுத்தித் தான் இந்திய அரசியல் சாசனம் இருக்கிறது. இந்தியத் தேசத்தை நிர்வகிப்பதற்காகத்தான் மாநில அரசுகள் உருவாக்கப்பட்டன. மாநிலங்களால் இந்திய அரசு உருவாக்கப்படவில்லை. அதைப் புரியாமல் தான் பலர் தமிழகத்தில் பேசி வருகிறார்கள். அதாவது மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தாங்கள் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார் என்பதற்காக பல மாநில அரசுகள் இத்தீர்ப்பை வரவேற்கலாம். ஆனால், எதார்த்தத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கி இருக்கக் கூடிய தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து அதிகாரங்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சரியானதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல் சாசனத்திற்கு ஆபத்தாக முடியும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி ஆளுநரைக் கையெழுத்திட வலியுறுத்துவார்கள் அல்லது சட்டம் தானாக அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். ஆளுநர் ஒப்புதல் தரவில்லையென்றால் இரண்டு நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அதற்கு நாங்கள் ஒப்புதல் தருகிறோம் என்று கூறுவது தவறான நடைமுறை.
இன்று வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு அப்படியே அமலுக்கு வரும் என்று கருதவில்லை. மத்திய அரசு உடனடியாக மேல்முறையீட்டுக்குச் செல்லும். மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் சேர்ந்து அரசியல் சாசனத்தின் படி ஆளுநருக்கான அதிகாரங்களை மறுவரையறை செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்தபின் தான் இது அமலுக்கு வரும். இது மிக மிக ஆபத்தான போக்கு. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவைகள் எல்லாம் எந்தத் தேதியிலிருந்து அனுப்பப்பட்டதோ அந்தத் தேதியிலிருந்து அதை அமலுக்கு வரும் என்பதெல்லாம் மிக மிகத் தவறானது; நீதிமன்றங்கள் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளது.
- டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக டெல்லி ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, புதிய சட்டம் இயற்றி மத்திய அரசு பாதுகாத்தது. அதேபோல் இப்போது செய்யுமா?
இந்தியாவின் தலைநகரான டெல்லி யூனியன் பிரதேசம் ஆகும். தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்தது. டெல்லியை பொறுத்தமட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம், கண்காணிப்பு அதிகாரம் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள துணை நிலை ஆளுநரிடம் இருந்து வந்தது.
இதனை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் குடிமை பணி அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரம் என்பது டெல்லி அரசுக்கு தான் உள்ளது. இதில் ஆளுநர் மூலம் மத்திய அரசு தலையிட முடியாது என கடந்த 2023ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் காரணமாக டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமன அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு கிடைத்தது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் அப்போது உடனடியாக கொண்டு வந்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை ஆளுநர் மூலம் பறித்ததாக குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி அப்போது முன் வைத்தது.
இந்நிலையில் டெல்லியில் நடந்தது போலவே தமிழக ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்குமா? அப்படியே மத்திய அரசு முடிவெடுக்க முடியுமா? ஆளுநர்களுக்கு போதிய அதிகாரங்களை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் சட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆளுநர்கள் விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
தீர்ப்பு விவரம் என்ன: தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முக்கியமான தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் படி, அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியவை தான்.
அதேநேரம் அரசியல் அமைப்பின் பிரிவு 200-ன்படி, முதல் முறையாக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநர் விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டசபைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். சட்டசபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்கியதாக வேண்டும்.
அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இல்லை.. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும் போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக இருக்கிறது.
எனவே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று இந்த உச்சநீதிமன்றம் கருதுகிறது. ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம் ஆகும்.
ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கிறது பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள் . ஆளுநர்களால் மறு பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு ஆகும். ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர்களின் அதிகாரம் என்ன என்பதும், ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு என்பது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதல்வராவார்.
மாநில அரசுகள் தங்கள் வரம்பிற்கு உட்பட்ட சட்டங்களை எந்த தடையும் இன்றி இனி நிறைவேற்ற முடியும். ஆளுநர் மத்திய அரசின் விருப்பப்படி இனி செயல்படவே முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மாநில அரசின் ஆலோசனைப்படியே செயல்பட்டாக வேண்டும். எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யுமா அல்லது டெல்லி பாணியில் அவசர சட்டம் இயற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- சமூகத் தளத்தில் …