கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், இவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ரோபோ’ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சைதாப்பேட்டையில் இருக்கும் செக்கர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “இந்தக் ‘கன்னி ராசி’ படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதைவிட, ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்த அனுபவம் கொண்டவர்.இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது அனைவருமே காதலித்துதான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும்.
இனிமேல் தமிழ் படங்களை விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் எடுக்கத் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் இனிமேல் தேசிய விருதெல்லாம் தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்காது. சென்ற வருடம் பல தகுதியுள்ள தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஒரேயொரு விருதினை மட்டுமே வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இனிமேல் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதுதான் நிலைமை.” என்றார். தன் பாடலுக்கான பேமெண்ட் பற்றியும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடமான குற்றாலத்தில் சூட்டிங்கை வைத்து வாராவாரம் எங்கள் அனைவருக்கும் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் முத்துக்குமரன் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத்தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப் படத்தில்தான் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். இது போன்ற கேரக்டர்கள் இவருக்கு எப்பவாவதுதான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப் படம் பெரிய வெற்றிகரமாக அமையும்..” என்றார்.இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, “இந்தப் படம்தான் எனக்கு முதல் படம். பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப் படம் இப்போது வெளிவர இருக்கிறது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்தப் படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் படத் தொகுப்பாளர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனுக்கும் நன்றி.
யோகிபாபு, ‘ரோபோ’ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக் கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது.” என்றார்.
நடிகை வரலட்சுமி பேசும்போது, “இப்படம் முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம். காதல் திருமணத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போதே விழுந்து, விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும்.
நான் இதுவரையிலும் ஒரு படத்தில் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. இதுதான் முதல் திரைப்படம். இந்தப் படத்தில் பாண்டியராஜன் சார், யோகிபாபு, ‘ரோபோ’ சங்கர் என பலருடனும் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.” என்று ஆணித்தரமாகச் சொன்னார் வரலட்சுமி.
நடிகர் விமல் பேசும்போது, “இந்தப் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. யோகிபாபு, ‘ரோபோ’ சங்கர், காளி வெங்கட் எல்லோர்கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும்.இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடுதான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக யாரையாவது காதலித்துக் கல்யாணம் செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
தற்போது அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில்தான் முதல்முறையாக ஒரு ஆம்பள ஹீரோயினோட நடித்திருக்கிறேன்.” என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.