சமீபத்தில் விஷாலுக்குச் சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த ரம்யா என்ற கணக்காளர் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பானது.
அந்த புகாரில், கணக்காளர் ரம்யா விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ் தொகையிலிருந்து பணத்தை கையாடல் செய்து தனது கணவர் தியாகராஜனின் வங்கி கணக்கிற்கும், தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தப் புகார் அளித்த விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதாக கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரி கிருஷ்ணன், தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். காலையில் வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.
ஏற்கெனவே ஹரி கிருஷ்ணன் விஷால் அலுவலகத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா , 45 லட்சம் ரூபாய் மோசடி செய்து கையாடல் செய்து விட்டதாக புகார் அளித்திருக்கும் நிலையில் திடீரென அவருடைய கார் கண்ணாடி உடைக்கபட்டிருப்பதால், அந்த புகாரில் தொடர்புடையவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்