சென்னை: லிங்கா’ பட விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர்கள் அறிவித்திருந்த தியேட்டர்கள் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10% நஷ்டஈடு தொகையை ஏற்க மறுத்து விநியோகஸ்தர்கள் தரப்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர்கள் தரப்பு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தனர். இதனிடையே, அந்தப் போராட்டம் நடைபெறும் அதே நாளில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஜினி ரசிகர்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் ‘லிங்கா’ விநியோகஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பங்கேற்று விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், முதலில் என்ன நடந்தது என்பதை விநியோகஸ்தர்கள் தரப்பில் எடுத்துரைத்தனர். தங்களுக்கு ரூ.33 கோடி நஷ்டம் என்று கூறப்பட்டது. அதற்கு சரத்குமார் ரூ.33 கோடியை எவ்வளவு தூரம் உங்களால் குறைத்து கொள்ள முடியும் என்று சரத்குமார் கேட்டார். அதற்கு ரூ.8 கோடி எங்களால் குறைத்துக் கொள்ள முடியும். கண்டிப்பாக ரூ.25 கோடி வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறினார்கள். என்னுடைய ‘சண்டமாருதம்’ வெளியாகிறது. திங்கள்கிழமை ரஜினியை சந்தித்து பேசிவிட்டு உங்களை அன்றைய தினமே நல்ல முடிவோடு சந்திக்கிறேன் என்று சரத்குமார் அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு விநியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவித்தனராம். பேச்சுவார்த்தையின் முடிவில், எங்களால் இன்னும் ரூ.3 கோடியைக் கூட குறைத்துக் கொள்ள முடியும். ஆனால், ரூ.22 கோடியில் இருந்து குறைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இப்பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், விநியோகஸ்தர்களின் பிச்சை எடுக்கும் போராட்டம் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லிங்கா பட விவகாரத்தில் சமரச முயற்சி: போராட்டம் ஒத்திவைப்பு
Popular Categories



