கொழும்பு: உலக அளவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது குறித்து, தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. சரத் பொன்சேகா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராணுவத் தளபதி என்ற முறையில் எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு எந்த அறிக்கையும் அப்போது கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்லஸ் ஆண்டனிக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியும். அதை உறுதிபடுத்தி, ஊடகங்களின் வழியாகத் தெரியப்படுத்தினோம். இருந்தாலும், பிரபாகரனின் மனைவி மற்றும் பெண், இளைய மகன் குறித்து எனக்கு எவ்விதத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.
பிரபாகரன் இளைய மகன் பாலசந்திரன் கொலைச் சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட சேனல் 4 ஆவணப் படத்தை எனக்குப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதிலும், சிறையிலிருந்த காலத்தில் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக, அது குறித்து நான் அறிந்து கொண்டேன். அந்த வீடியோக் காட்சியில் இருப்பது உண்மையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இறுதிக் கட்டப் போரின் இரண்டு நாள் போரின் போது பலர் கொல்லப்பட்டார்கள். ஆனால் ராணுவத் தளபதி என்ற முறையில் பிரபாகரனின் இளைய மகன் குறித்து எனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் அவரின் சடலம் கிடைத்தது என்று கூட எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொலை: எதுவும் தெரியாது என்கிறார் பொன்சேகா
Popular Categories


