கேள்வி பதில் – அயனாவரம், சபரிமலை, இந்து ஊடகம்…

Published:

02 July19 Child abuse - 2026

அயனாவரம் சிறுமி – விவகாரத்தில் என்ன தண்டனை தரவேண்டும்?

முறையாக வழக்கு விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்படும் அனைவரும் ஆயுள்தண்டனை அனுபவித்தாகவேண்டும். அது நான்கு சுவர்களுக்குள் அனுபவிக்கும் சுதந்தர மறுப்பாக இருந்தால் போதாது. ஒவ்வொரு கிராமத்துக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் சென்று அங்கு இருக்கும் சிறுமிகளிடம் தான் செய்த செயலுக்கு வாரா வாரம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

பெற்றோர் பார்வையில் இருந்து அதிக நேரம் விலகிச் செல்லவேண்டாம். எது நடந்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிடவும். எந்த உறுப்புகளை அந்நியர்கள் தொட அனுமதிக்கக்கூடாது, கொன்று விடுவதாக மிரட்டினால் பயப்படக்கூடாது, செல்போனில் படம் எடுத்திருப்பதாக மிரட்டினால் மிரண்டுவிடக்கூடாது என்று கை கூப்பியபடியே அந்தக் குற்றவாளிகள் சொல்லித் தரவேண்டும். அந்தக் குழந்தையின் பெற்றோரும் ஊர் ஊராகச் சென்று குழந்தைகளைத் தனியே விடாதீர்கள் என்று தங்கள் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்தாகவேண்டும்.

குற்றம் செய்தவர்களுக்கான தண்டனை என்பது அந்தக் குற்றம் இனிமேலும் நடக்காமல் இருக்க விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்வதாக இருக்கவேண்டும்.

சீக்கிய மதத்தில் பொற்கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளைத் துடைக்கும் பணியை சேவை நோக்கில் செய்வார்கள். செய்த தவறுக்கான தண்டனையாகவும் கொடுப்பார்கள்.  பாலியல் குற்றங்களில் சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை என்பவற்றைவிட பொது வெளிகளில் அது தொடர்பான விழிப்பு உணர்வு பெருகும்வகையில் தரப்படும் சீர்திருத்த வழிமுறைகளே அவசியம். அதுவே பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் தற்காத்துக்கொள்ளவும் வழிவகுக்கும். குற்றவாளிகள் செய்யும் பிராயச்சித்தமாகவும் இருக்கும்.

sabarimala 04 - 2026

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தருவதைப் பரிசீலிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறதே…

காலத்துக்கு ஏற்ப சிலவற்றை மாற்றிக்கொண்டாகவேண்டும். சிலவற்றை என்ன ஆனாலும் மாற்றிக்கொள்ளவே கூடாது. பாரம்பரியம், கலாசாரம் என்பது கடந்த காலத்துடன் நிகழ் காலத்தைப் பிணைக்கும் அம்சங்கள்தானே.

சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி விஷயத்தில் மாற்றிக்கொள்ளவேண்டுமா… கூடாதா..?

முதலில் இதில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். பெண்கள் அனைவருக்குமே சபரி மலையில் அனுமதி மறுக்கப்படவில்லை. 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஐயப்ப பக்தி மிகுந்த பெண்கள் ஐம்பது வயது வரை காத்திருக்கலாம். அல்லது தமது குழந்தைகளைப் பத்து வயதுக்குள்ளாகவே ஐயனை தரிசிக்க வைக்கலாம். பக்தி மிகவும் அதிகமாக இருந்தால் அதே கேரளாவில் பகவதி அம்மன் கோவில்களில் எல்லா வயதுப் பெண்களுக்கும் முழு அனுமதி தரப்படுகிறது. பகவதி அம்மனின் அருளைப் பெற்றுக்கொண்டு வாழ்வில் நற்கதி அடையலாம்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

சபரி மலையில் 10-50 வயதுப் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என்பது சமத்துவத்துக்கு எதிரான நோக்கில் செய்யப்படவில்லை. அந்தக் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு மரபின், ஐதீகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கிறது. அங்கே நீதிமன்றம் குறுக்கிடுவது என்பது சமத்துவத்தை நிலை நாட்டும் செயல் அல்ல. பாரம்பரியத்தைச் சிதைக்கும் செயலே.

ஒருவேளை நீதி அரசர்களுக்கு சமத்துவத்தை எல்லா இடங்களிலும் நிலைநாட்டியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,  முதலில் நீதி அரசர்களும் பிற அதிகார வர்க்கங்களைப் போல் க்ரிமினல் – ஊழல் நீதி விசாரணைகளுக்கு உட்பட்டவர்களே என்ற தீர்ப்பை வழங்கட்டும். கொலோஜியம் என்ற தனிப்பட்ட அமைப்பு வேண்டாம் என்று சொல்லட்டும். விசாரணைக்கு உட்பட்டிருப்பவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும்வரை கெளரவமாக அமர்ந்து பதில் சொல்லட்டும் என்று சொல்லட்டும். குறைந்தபட்சம் மை லார்டு என்று கூப்பிடுவதை நிறுத்தச் சொல்லட்டும்.

மசூதிகளில் பெண்களையும் அனுமதிக்கலாமே… வெப்பம் நிறைந்த பூமியில் முகமும் மறையும்வகையில் கறுப்பு உடைபோட்டு வாட்டலாமா… பாவ மன்னிப்புகளை கன்யாஸ்த்ரீகளும் வழங்கலாமே… என்றெல்லாம் தர்ம ஆலோசனைகள் வழங்குவதுதான் சிரமம். நீதித்துறையிலாவது சமத்துவத்தையும் வெளிப்பட்டைத்தன்மையையும் நீதியையும் நிலை நாட்ட முதலில் முயற்சி செய்யட்டும்.

puthiyathalaimurai karthikeyan narayan thirupathi - 2026

இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் தொடர்ந்து ஊடகத்தினரும் அரசியல்வாதிகளும் வெளிப்படையாக தைரியமாக நடந்துகொள்கிறார்களே. இதை எப்படி எதிர்கொள்ள?

பொதுவாகவே அரசியல்வாதிகள், ஊடகங்கள், பிரபலங்கள் எல்லாரும் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தால் பணிந்துபோகும் குணம் கொண்டவர்களே. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் பற்றி அவர்கள் எதுவும் பேசாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இரண்டு. ஒன்று எஜமானர்களைப் பகைக்க யார்தான் முன்வருவார்? இன்னொன்று அந்த மதங்களின் அடிப்படைவாதிகளைக் கண்டு பயம். அந்த மதங்களின் மக்கள் அந்த அடிப்படைவாதிகளின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால்  அந்த மதங்களின் அடிப்படைவாதிகள் அந்த மக்களை முன்னிறுத்தியே பெரும் மிரட்டலை விடுக்கமுடியும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் இந்து என்ற உணர்வைவிட ஜாதி  உணர்வே அதிகம். இந்தியன் என்ற உணர்வைவிட மொழி உணர்வே அதிகம். இந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொண்டாகவேண்டும். மையம் அழிக்கப்பட்ட அமைப்பில் இப்படியான அடையாளப்படுத்தல்தான் இருக்கும். பேரடையாளம் என்பது சிறிய அடையாளங்களை தொகுக்கும் பணியை மட்டுமே செய்யும். சிற்றடையாளங்களே அனைவருடைய அடித்தள நம்பிக்கையாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களிலும் நிலைமை இதுவே. ஆனால், அவர்களிடம் ஊடகங்கள் இருப்பதாலும்  தற்போது இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதாலும் அவர்களுக்குள் பெரும் ஒற்றுமை இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கிவர முடிகிறது. மொழி அடிப்படையில் ஆந்திர கிறிஸ்தவர் தமிழக கிறிஸ்தவருடன் ஒருபோதும் இணையமாட்டார். அஸ்ஸாம் முஸ்லிம் கர்நாடக முஸ்லிமுடன் இணையமாட்டார். ஒவ்வொரு மொழிக்குள்ளாகவும் இருக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ பிளவுகள் காலப்போக்கில் வெளிப்படத்தான் செய்யும். இன்று ஊடகங்கள் கையில் இருப்பதால் அதைப் பூசி மொழுகி வருகிறார்கள். ஆனால், அது நீடிக்காது.

இப்போது எதிரணியிடமும் இருக்கும் உள்ளார்ந்த இந்த பலவீனத்தைப் பார்த்து நாம் மனநிறைவு கொள்வதைவிட நம்மிடையே ஒற்றுமை பலப்படவும் எதிர் தரப்பினருக்குத் தக்க பதிலடி கொடுக்கவும் என்ன செய்ய என்று பார்க்கவேண்டும்.

இந்து ஒற்றுமை என்பது தன்னளவில் உருவாகிவரத்தான் செய்கிறது. முதலில் இந்து விரோத சக்திகளுக்கு பதிலடி கொடுப்பதுதான் மிகவும் அவசியம்.

இன்று ஊடகங்கள்தான் மிகப் பெரிய அதிகார மையமாக இருக்கின்றன. இந்துக்களிடம் பண பலம், ஆள் பலம், அதிகார பலம் எல்லாம் இருக்கின்றன. என்றாலும் வலுவான ஊடக அதிகார மையமாக வளர முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அதிலும் தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மாபெரும் இந்து ஆதரவு ஊடக நிறுவனம் ஒன்றை உருவாக்கும் பணிகளை நீண்ட கால இலக்காக வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு முன்பாக உடனடியாகச் செய்ய வேண்டிய செயலாக ஒரு எளிய வழி இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் நாலைந்துபேர் ஒன்று சேர்ந்து ஒரு கேமரா, மைக் வாடகைக்கு எடுத்து இந்து விரோதிகள் பேசும் பேச்சுகள், எழுதியவை இவற்றை எளிய மக்களிடம் சொல்லிக் காட்டி அவர்களுடைய பதிலைப் பதிவு செய்து வலையேற்றலாம். மாத விலக்கு நாட்களில் தெய்வங்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு நீங்களும் நானும் சொல்லும் பதிலைவிட எளிய இந்துத் தாயின் பதில் பொருத்தமானதாக இருக்கும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஊடகங்களைவிட மிகப் பெரிய மக்கள் சக்தி இந்து மதத்துக்கு ஆதரவாகவே இருக்கிறது. அதை முன்னுக்குக் கொண்டுவந்தால் போதும். அந்த இந்துக் குரலை இன்றைய ஊடகங்களில் பேசப் போகும் நம் பிரதிநிதிகள் அவர்கள் பேசும்போது போட்டுக் காட்டட்டும். பேட்டி கொடுக்க என்றே விமான நிலையத்துக்கு வந்து போகும் அரசியல்வாதிகளிடம் அதைப் போட்டுக் காட்டி நாம் கேள்வி கேட்கலாம். இன்று ஊடகவியலாளர்கள் அதே மைக்கும் கேமராவும் கையில் இருப்பதால்தான் மக்கள் குரல் என்ற பெயரில் எழுதிக் கொடுத்துப் பேச வைத்து உலகம் முழுவதும் அதை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எழுதிக் கொடுக்கவேண்டாம். நம் மக்களுக்கு என்ன பேசவேண்டும் என்று தெரியும். அவர்களை முன்னுக்குக் கொண்டுவரும் வேலையை மட்டும் நாம் செய்தால் போதும்.

நமக்குத் தேவை ஒரு கேமரா… ஒரு மைக் மட்டுமே.

  • கருத்து, சிந்தனை: பி.ஆர். மகாதேவன் (பத்திரிகையாளர், எழுத்தாளர்)

Related articles

Recent articles

spot_img