கும்பகோணத்தில் 14 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டவருக்கு இன்று கும்பகோணம் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ராஜா என்கிற கட்டை ராஜாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கட்டை ராஜாவும் அவரது ஆட்களும், செந்தில்நாதனை கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள மாடாக்குடி புதிய பாலம் அருகே வைத்து வெட்டிக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செந்தில்நாதன் கொலை வழக்கில் கட்டை ராஜா உள்பட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு மற்றும் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த செந்தில்நாதன் கொலை வழக்கில் இன்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு கூறினார். கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பை அளித்தார். இந்த வழக்கில் இருவர் இறந்ததால் மற்ற இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.
ரவுடி கட்டை ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 14 கொலை வழக்குகளிலும், 3 கொலை முயற்சி வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





