
விருதுநகர் மாவட்டத் தலைநகரான விருதுநகரில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் பகுதியில் கடந்த நவ.,8 அன்று அதிகாலை அடுத்தடுத்து 12 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், காமராஜர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் விறகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணப் பெட்டியைத் திறந்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கட்டையாபுரம் பகுதியில் வீட்டின் முன்பு இருந்து ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.
மேலும், பாத்திமாநகர் பிரதான சாலையில் உள்ள தெருக்களுக்குள் உள்ளே சென்று ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு ஏதும் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.
பாத்திமாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே செல்லும் காட்சி அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகனின் வீட்டு கண்காணிப்புக் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அந்த நபர் எவ்வித பதட்டமும் இன்றி கையில் ஒரு டார்ச் லைட் மற்றும் ஒரு இரும்பு கம்பியுடன் வந்து சாதுர்யமாக பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே செல்கிறான்.
இதுகுறித்து சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன் கூறுகையில், பொதுவாக கடந்த காலங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் அதிக அளவில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள். சமீப காலமாக காவல்துறையினரின் இரவு நேர ரோந்துப் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பொது மக்களே தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத்தான், திருடர்கள் இரவு நேரத்தில் எவ்வித அச்சமும் இன்றி தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறுகின்றனர். விருதுநகரில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதாக உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட காவல்துறை, விருதுநகர் நகர் பகுதியில் ரோந்துப் பணிகளை காவல்துறையினர் மூலம் தீவிரப்படுத்த வேண்டும். பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கிடும் வகையில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேற்படி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
