அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும், அதனால் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். அதே நேரத்தில் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலமைச்சரை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக் கழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவத்தேர்வு சரியாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பருவத்தேர்வில் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், அந்த மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.
மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்களும் தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.