கொரோனா காரணமாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கு வழியில்லை.
அதே நேரத்தில் அரசு சார்பில் மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சியில் தினமும் ஆசிரியர்களை வைத்து வகுப்பு வாரியாக பாடங்களை நடத்தி வருகிறது.
ஆனால் கிராமங்களில் கல்வி தொலைக்காட்சியை பார்த்து மாணவர்களை படிக்க வைக்க பெற்றோர் சிரமப்படுகின்றனர். பெற்றோர் அருகில் இருக்கும் வரை குழந்தைகள் கல்வி தொலைக்காட்சியை பார்க்கின்றனர்.
கொஞ்சம் நகர்ந்தால் வேறு சேனலை மாற்றி விடுவர். இதனால் கல்வி மேல் உள்ள ஆர்வம் குறைந்து வருகிறது. படிப்பும் மறந்து வருகிறது.
இந்நிலையில் ‘ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்பதற்கேற்ப சிவகாசி ஆசாரி காலனி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி, மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்துகிறார்.
கல்வி தொலைக்காட்சியையும் பார்க்க வைக்கிறார். அதில் எழும் சந்தேகங்களையும் விளக்குகிறார். மேலும் இதோடு எழுத்து, புத்தக வாசிப்பு பயிற்சியும் அளிக்கிறார்.
ஆசிரியரே வீட்டிற்கு நேரில் வந்து பாடம் நடத்துவதால் மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்.
ஆசிரியை சுப்புலட்சுமி கூறுகையில்: கொரோனா தொற்றால் பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்கள் படிப்பினை மறந்து வருகின்றனர். அரசு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் அதைபயன்படுத்தி படிக்க வைப்பது சிரமமே. சில இடங்களில் பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.
தங்களது வேலைக்கு உதவியாக வைத்து கொள்கின்றனர். நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்றே பாடம் நடத்துகிறேன், என்றார்.
ஆசிரியையின் இந்த செயல் பெற்றோர் மாணவர்களிடையே பாராட்டுகளையும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.