சொல்லுங்கள்.. நான் ஏன் சசிகலா, தினகரனை கொண்டாடவேண்டும்?
ஜெயலலிதா இறக்கும்வரை தினகரன் அதிமுகவில் இல்லை.. சசிகலாவை தவிர மற்ற உறவினர்களுக்கும் இதே கதிதான்.. ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தனர்..
நெருங்கிய தோழியான சசிகலா, துக்கவீட்டிற்கு ஒதுக்கப்பட்ட உறவினர்கள் அனைவரையும் அனுமதித்தது தவறில்லை..
ஆனால் ஜெயலலிதா போட்ட கோட்டை அழித்துவிட்டு தினகரனை அரசியலில் முன்னிலைப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்? கட்சியில் உறுப்பினரே இல்லாத அவரை அழைத்துக்கொண்டு கவர்னர் மாளிகை சென்றார்.. இதுமாதிரி நிறைய உண்டு..போகட்டும் ..
தினகரன் என்பவர் யார்? சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்.. சசிகலா குடும்பத்தால் தமிழ்நாட்டுக்கு பலன் ஏற்பட்டதா அல்லது பாதிப்பு ஏற்பட்டதா என்பதா என்பதை மனசாட்சியோடு சிந்தித்து பாருங்கள்..
ஏகப்பட்ட பொருளாதார குற்றச்சாட்டுகள் அந்த குடும்பத்தின் மீது, சசிகலா, இளவரசி, விஎன் சுதாகாரன் ஆகிய மூன்று பேரை ஊழல் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றமே உறுதி செய்து ஜெயிலில் இப்போது தண்டனை கைதிகளாக இருக்கிறார்கள்..
சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன் சகோதரர் பாஸ்கர் ஆகியோர் லெக்சஸ் கார் இறக்குமதி மோசடி வழக்கில் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து இரண்டாண்டு சிறை விதித்தது.. பின்னர் இதை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.. இப்போது உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள்..
டிடிவி தினகரன் மேலே பொருளாதார குற்ற வழக்குகள் உள்ளன. அன்னிய செலாவணி மோசடி விவகாரத்தில் அமலாக்கதுறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது..
தோழியாக இருந்த ஒரு முதலமைச்சரின் மரணத்தை விசாரணை கமிஷ்ன் வைத்து விசாரிக்கும் அளவுக்கு கொண்டுபோய் இருக்கிறார் அவரை அருகில் இருந்த கவனித்துக்கொண்ட சசிகலா..
இப்போது விசாரணை கமிஷன் அழைத்தால் மௌன விரதம் என்கிறார் சசிகலா..எல்லாரைக்காட்டிலும் முக்கியமாக பேசவேண்டியவர் சசிகலாதான்.. ஆனால் யாருமே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
எங்காவது, எதிலாவது நேர்மை.. இருக்கிறதா? வெளிப்படை தன்மை இருக்கிறதா?
தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் விரும்பித்தான் தேர்ந்தெடுத்தார்கள் என்று நீங்கள் நம்பினால் அது உங்களின் மனசாட்சியை பொறுத்தது.. நமக்கு அங்கே வேலை இலை
இவ்வளவு பின்னணிகள் இருந்தும் தினகரன் அருமையாக பேசுகிறார், சாமர்த்தியமாக பதில் சொல்கிறார் என்று தூக்கிப்பிடிக்கிறார்கள்..
தினகரன் எதற்காக அசைப்படுகிறார்.. ஆட்சியை பிடிக்க.. சசிகலா குடும்பம் ஆட்சியை பிடித்தால்…
தவறை செய்வோம். எந்த கொம்பனாலும் அதை கண்டுபிடிக்கமுடியாது என்று சர்வசாதாரணமாக பேசுகிறார்களே அதெல்லாம் பெருமையான விஷயமா?
என் விமர்சனத்தின் பின்னணி இவ்ளோதான்…
கருத்து: ஊடகவியலாளர் ஏழுமலை வேங்கடேசன்


