ஆதி சங்கரருக்கும் திருமூலருக்கும் முன்பே… தமிழகத்தில் கணபதி வழிபாடு!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

sankarar thirumoolar vinayakar - 2026

ஆதிசங்கரருக்கும் திருமூலருக்கும் முன்னமே ஸ்ரீ கணபதி வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்

(ரிக் வேதம்2.23.1)

ரிக் வேதம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் கணபதி வழிபாடும் 5000 வருடத்திற்கு முந்தியது என்று அறிய முடிகிறது. சிலர் மேலே உள்ள மந்திரத்தில் வருகிற கணபதி என்கிற வார்த்தை பிரஹஸ்பதியைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் யானை முகம் கொண்டவருக்கான வழிபாடு இருந்தது என்றும் வேதகாலத்தை ஆய்வு செய்கிறவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்த் தாத்தா உ வே சா அவர்கள் ஊர் ஊராகப் போய் ஓலைச்சுவடியைச் சேகரித்தவர். அந்த ஓலைச்சுவடியில் உள்ள சங்க இலக்கியங்களைப் பதிப்பித்தவர். பரிபாடலையும் தமிழ்த் தாத்தா 1918 ஆம் ஆண்டு பதிப்பிக்கிறார். பரிபாடலில் வரும் ஒரு பாடலைக் கீழே காணலாம்.

முக்கை முனிவ! நாற்கை அண்ணல்!
ஐங்கை மைந்த! அறுகை நெடுவேள்!

(திருமால் வாழ்த்துப் பாடல்)

திருமால் ஆகிய நீயே முக்கை முனிவன் அதாவது தவத்தில் இருக்கும் சிவபெருமான், நீயே சதுர்புஜத்தோனான ப்ரஹ்மதேவன், நீயே ஐந்து கரங்களை உடைய விநாயகன், நீயே ஆறுகரங்களை உடைய முருகப்பெருமான்என்று சங்கப்புலவர் புகழ்கிறார். இதில் விநாயகரை ‘ஐங்கை மைந்த’ என்கிறார் ஐந்து கரத்தனை என்று தானே திருமூலரும் திருமந்திரத்தில் தெரிவிக்கிறார்?

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பரிபாடலில் திருமாலுக்கு 8பாடல்கள், முருகனுக்கு 31பாடல்கள், காளிக்கு அதாவது கொற்றவைக்கு1 பாடல்,வையைநதிக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)

திருமாலுக்கு 6பாடல்கள், முருகனுக்கு 8பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள்என 22 பாடல்களே கிடைத்துள்ளன. பெருமாளுக்கு உரிய பாடலில் விநாயகரைப் பற்றிய செய்திகள் வருகின்றன

விநாயகருக்கு ஒரு பெயர் பிள்ளை அல்லது பிள்ளையார்( மூத்த பிள்ளை) ஆகும். பிள்ளை என்றால் “குழந்தை” என்றும், பிள்ளையார் என்றால் “உன்னதமான குழந்தை” என்றும் சொல்வார்கள்.

தமிழ் மொழி உள்ளடங்கிய திராவிட மொழி குடும்பத்தில் பாலி மொழியில் பில்லக்கா என்று ஒரு வார்த்தை உள்ளது. பில்லக்கா என்றால் இளம் யானை என்று பொருள். பிள்ளையார் என்று பின்னர் (பில்லக்கா) மாறியிருக்கலாம் என்று சொல்வோரும் உண்டு. பாலியில் பன்னெடுங்காலமாகப் பிள்ளையார் வழிபாடு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமய நூல் ஆகும்.சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

“சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட”, “ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்” என்ற இப்பாடல்கள் மூலம்……திருமந்திர காலத்திற்கு முன்பு ஆறு முக்கிய சமயங்கள் இருந்துள்ளன என்பது தெரியவருகிறது. ஆறு சமயங்களில் ஒன்று விநயாகரை வணங்கும் சமயம். எனவே விநயாகரை வணங்கும் வழக்கம் திருமந்திரக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

தில்லைத்திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குக் கி.பி. 500-ல் ஆண்ட பல்லவ அரசன் சிம்மவர்மன் பொன் வேய்ந்தான். அதன்பின் அது பொன்னம்பலம் ஆயிற்று. திருமூலர் இப்பெயரைக் கையாள்கின்றார். எனவே, திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவராக இருக்கக்கூடும்!! இன்னும் சிலரோ இவர் சங்க காலத்திற்கும் முன்பாக வாழ்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.

பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, 6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது ஆகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூக்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது. இது 6-ம் நூற்றாண்டில் காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது!

திண்டிவனம் அருகே ஆல கிராமத்தில் உள்ள எம தண்டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள்
கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புறப் பகுதியில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பீடத்தில் 3 வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடிவம் பூளாங்குறிச்சி எழுத்து வடிவத்துக்குப் பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல்லெழுத்து வடிவத்துக்கு முந்தையதும் ஆகும். அதாவது 4-ம் நூற்றாண்டுக்கும், 6-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம்!! அப்படியானால் பிள்ளையார் வழிபாடு நாலாம் நூற்றாண்டுக்கு முந்தியது!!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரை ஆறு சமயத்தையும் இணைத்த ஷண்மத ஸ்தாபகர் என்று சொல்கிறோம். ஆதிசங்கரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. எனவே இந்த நூற்றாண்டுக்கு முன்னரே அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். முழு முதல் கடவுளான பிள்ளையார் சங்க காலத்துக்கும் முந்தியவர் என்று வாதிப்போர் நிறைய பேர்.

Related articles

Recent articles

spot_img