அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்!
– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
சித்தாந்தங்கள் தத்துவங்கள் போராட்டங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டனவா? அல்லது இன்றைய பின் நவீன மூலதனத்தில் உட்செரிக்கப்பட்டு விட்டனவா?
தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட சில அம்ச கோரிக்கை உள்ளடக்கிய போராட்டம் நடைபெறகிறது. வாகனங்களை இயக்க முடியாது என்று ஸ்ட்ரைக் செய்யவும் உள்ளார்கள்.
பலமுறை பேச்சு வார்த்தைக்கு பின்னும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
எப்போதும் எதற்கெல்லாமும் தெருவில் போராடும் இடது சாரிக் கட்சிகள் இந்த விஷயத்தில் தங்களது தமிழ்நாடு தழுவிய பெரிய அளவில் எதிர்ப்புணர்வை ஏன் காட்டாமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை.
சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த இந்திய தேசிய காங்கிரஸின் குடியாட்சி என்பது உண்மையில் இந்தியப் பெரு முதலாளித்துவத்தின் வர்க்கச் சார்புடையது! அந்த ஆட்சி ஒருபோதும் தொழிலாளர்களுக்கு இழப்பதற்கு கை விலங்குகளைத் தவிர வேறு ஒன்றையும் அதாவது குறைந்தபட்சக் கூலியை கூட அளிக்காத சுரண்டல் அமைப்பு என்றும் அத்தகைய பொருளாதாரம் ஒரு அரை தரகு முதலாளித்துவம் என்றெல்லாம் அன்று இடதுசாரி அறிவு ஜீவிகள் போராளிகள் வர்ணித்தார்கள். எங்கு நோக்கினும் செங்கொடி !!தொழில் புரட்சி காலத்தில் எழுந்த பொருளாதார மாற்றங்கள் ஒரு பக்கம் இருக்க தங்களது தீவிரமான பிரச்சாரத்தின் அடிப்படையில் அன்றைய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இடம் பெற பல்வேறு மாநிலங்களில் தங்களின் பிரதிநிதிகளை வெற்றி பெறச் செய்துநாடாளுமன்றத்திற்கு அனுப்பியும் வைத்தார்கள் என்பது தான் வரலாறு.!
கூலி உழைப்பு பஞ்சப்படி என்று தொழிலாளர்களை மேம்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தி மக்களிடையே பிரசித்தி பெற்றிருந்தார்கள். அப்போது எல்லாம் சிபிஐ சிபிஎம் என்று கட்சி இரண்டாக உடையவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதாவது சுருக்கக் கோடாக சிபிஐ மட்டும்தான் இருந்தது. பின் கட்சி இரண்டாக பிரிந்தது.
அந்நிலை இந்திரா காந்தி பிரதமராகும் வரையும் இருந்தது . அப்போதெல்லாம் போராடிய இடதுசாரிகள் குறிப்பாக டாங்கே நம்பூதிரி பாடு முதல் பி ராமமூர்த்தி வரை மக்களின் முன்பு சோசலிஸ சமூகத்தை அமைக்க போகிறோம் என்று பிரகடனப்படுத்தினார்கள்.
புத்திசாலித்தனமான நேரு அவ்வாறு போராடிய கம்யூனிஸ்ட்களை உள்ளடக்கிச் செரித்து அதை சோசலிச ஜனநாயகம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் தாராளவாதச் சிந்தனைக்குள் இடப்படுத்தினார்.
இந்த வரலாறு ஒருபுறம் இருக்க தமிழகத்தில் திராவிட சிந்தனை இடதுசாரி சிந்தனை என்று அண்ணா முதல் கலைஞர் ஈறாக இன்றைய திராவிட அரசியல்வாதிகள் தமிழ்நாட்டின் சாதிஓட்டு வங்கிகளைப் பெற இடதுசாரிகளின் பொது சித்தாந்தத்தை சமத்துவமே குறிக்கோள் என்பதாக பயன்படுத்தி உண்மையில் தங்களுடைய லேபர் பிரிவாக அவர்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதில் என்ன சூட்சுமம் இருக்கிறது?
1950இல் இருந்து தொடரும் தெருமுனைகள் சலூன் கடைகள் தொழிற்சாலைகளின் முன்பான போராட்டங்கள் பலவற்றையும் வரலாற்றில் அல்லது என் வாழ்க்கையிலும் இதை கண்ணாரப் பார்த்து வந்திருக்கிறேன்! இந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் இருந்தே இடதுசாரி தொழிற்சங்கங்களையெல்லாம் தந்திரமாக ஒழித்துவிட்டு இப்பொழுது தங்களுக்கான அரசியல் கூட்டணியில் ஓரிரு இடங்களை சிபிஎம் சிபிஐ இருவருக்கும் தானமாக கொடுத்து தங்களுக்கான ஊழியர்களாக அவர்களை வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பதை நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை.
கலைஞர் காலத்திலேயே மணலி கந்தசாமி விவகாரம் என பல உண்டு, ஓரிடத்தில் கலைஞர் இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒழித்து கட்டுவேன் என்றெல்லாம் கூட சவால் விட்டுள்ளார். அதெல்லாம் போகட்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவிற்கு அதாவது இடதுசாரிகளின் தேர்தல் செலவிற்கு
பெரும்பங்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஊரறிந்த செய்தியாக இன்றும் இருக்கிறது.
இன்றைய போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு வேலை நிறுத்தம் செய்யும் அந்தத்தொழிலாளர்களின் சார்பாக இரண்டு இடதுசாரிகளும் ஏதும் கடுமையான அளவில் அறிக்கை கூட விடாமல் வாய்மூடி மௌனமாக இருப்பார்கள் என்பதை தவிர ஒரு நாடு தழுவிய போராட்டத்தை இன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராக அவர்கள் தொடங்க மாட்டார்கள் என்று தான் தெரிகிறது .
குதிரை குப்புறத் தள்ளி குழியும்பறித்த கதையாக இன்றைய முதல்வர் ஒருவேளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்கு வராமல் இருந்தால் அவர்களைப் பணி நீக்கம் செய்வதோடு சட்டப்படி அவர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்வேன் என்றும் சொல்லி இருக்கிறார்.
தீராத மழை காலங்களிலும் பல்வேறு பருவ காலங்களிலும் இந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தின் பொருட்டு இரவு பகல் காணாது ஷிப்ட் முறையில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைய விலைவாசி உயர்வில் சம்பளப் பற்றாக்குறையும் இருக்கிறது. தமிழ்நாடு எங்கும் வேறு மாநிலங்களை விட போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது என பாராட்டப்படும் ஊழியர்களின் சேவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான ஆலோசனை.
அவர்களுடைய கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பது தான் முறை. அதை விட்டு கைது செய்வேன் பணி நீக்கம் செய்வேன் வேறு ஊழியர்களைக் கொண்டு போக்குவரத்தை இயக்குவேன் என்றெல்லாம் சொல்வது அதிகாரப் போக்குதான்.
ஆனால்,அரசு எங்களுக்கு கடன் பட்டிருக்கிறது! ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும்..போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கறாராக உள்ளது,
தகுதியுள்ளவர்களை புறம் தள்ளு குடும்ப அரசியல் கோமகன் முதல்வர் ஸ்டாலின் சொல்லட்டும் !ஆனால் தமிழ்நாட்டின் இடதுசாரிகள் இதுகுறித்து ஏன் மௌனம் காக்கிறார்கள்.
சித்தாந்தங்கள் தத்துவங்கள் போராட்டங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டனவா? அல்லது இன்றைய பின் நவீன மூலதனத்தில் உட்செரிக்கப்பட்டு விட்டனவா? அல்லது உண்மையில் இப்போது நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
#ரசுபோக்குவரத்துஊழியர்களின்_போராட்டம் #ksrpost