
செங்கோட்டை ரயில் நிலையம், அந்நாளின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலத்தில் கட்டப்பெற்ற மிகப் பழைமையான பாரம்பரியமான ரயில் நிலையம்! பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில், பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த தமிழகப் பகுதியில் இருந்து, தன்னாட்சிப் பகுதியான திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு அந்நாளில் ரயில் பாதை அமைத்தார்கள். எனவே தான் நூற்றாண்டுகள் பழைமையான ரயில் பாதையாக இந்தப் பாதை அறியப்பட்டது.
எல்லைப் பகுதியில் இருந்த செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவாங்கூர் சமஸ்தானப் பகுதி தொடங்குவதால் இந்த ரயில் நிலையம் மிகப் பெரும் அளவில் கட்டமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
மிகப் பாரம்பரியமான ரயில் நிலையமாக, அதிக அளவிலான பணியாளர்களுடன் பரபரப்பாகத் திகழ்ந்த ஒரு ரயில் நிலையம், இன்று மதுரை கோட்ட நிர்வாகத்தினரின் பாராமுகத்தால் படிப்படியாக அந்தப் பரபரப்பை இழந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது.

செங்கோட்டை ரயில் நிலையத்தில்… மீண்டும் பிட் லைன் வசதி ஏற்படுத்தப் படுமா?! என்ற நமது 2021ம் ஆண்டின் பதிவு… அதில் இருந்து…
100 கி.மீ., தொலைவுக்குள் இரு பிட் லைன் வாய்ப்பு இல்லையாம். திருநெல்வேலியில் பிட்லைன் வசதி உள்ளது. அடுத்து கொல்லம் பெரிய ஸ்டேஷன். ஆனால் கொல்லத்தில் பிட் லைன் தேவை என்று பிரேமசந்திரன் எம்.பி., குரல் கொடுத்தார். ரயில்வே வளர்ச்சி விவகாரங்களில் கேரள எம்.பி.க்களின் செயல்பாடு அலாதியானது.
செங்கோட்டையில் பிட்லைன் வசதி இல்லாத காரணத்தால் தான், பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை – சென்னை சென்று, மறுநாள் சென்னை – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகி, அது மறுநாள் நெல்லை – சென்னை சென்று, பின்னர் சென்னை-செங்கோட்டை பொதிகை ஆகி… ஒரு சுற்று வருகிறது. திருநெல்வேலி பிட் லைனில் வைத்து பராமரிப்புப் பணிகளைச் செய்கின்றனர்.
முன்னர் செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெரும் குடியிருப்பே இருந்தது. இஞ்சின் பராமரிப்பு, இன்சின் பராமரிப்பு கட்டடம், பெட்டிகள் பராமரிப்பு, பிட் லைன், அவற்றுக்கான பொறியாளர்கள் , குடும்பத்தினர் வசிப்பிடம், ரயில்வே மருத்துவமனை, இப்படி பெரிய தளமாக, நிறைய பேர் வசித்து வந்தனர். மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜ் ஆகும் போது, ஒவ்வொன்றாக கழன்று கொள்ள ஆரம்பித்தது. வசிப்பிடங்கள் காலியாயின. மீட்டர் கேஜ் பிட் லைன் மண் மூடி, புதர் வளர்ந்தது.

முன்னர் மீட்டர் கேஜில் 8 பெட்டிகள் பிட் லைனில் விட்டு பராமரித்த இடம்… இப்போது 18 பெட்டிகள், நீளமான 24 பெட்டிகள் கொண்ட பொதிகை .. இதற்கெல்லாம் பிட்லைன் அமைக்க என்றால் ஒரே நீளத்துக்கு நேர் கோட்டில் இடம் வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது செங்கோட்டை ரயில் நிலையத்தில் பழைய பிட் லைனில் இட நீட்டிப்பு செய்தால், ஓர் இடத்தில் அது திரும்பி விடுகிறது. கனமான பாறை உயரத்திலும், கூடவே சில குடியிருப்புகளும் அந்த இடத்தை முட்டுகிறது… என்கிறார்கள்.
ரயில் நிலையத்தில் தற்போது முதல் 4 பிளாட்பாரங்களே பயன்பாட்டில் உள்ளன. அடுத்து பழைய லைனைப் பிரித்து சும்மா இருக்கக் கூடாது என்று… 2 லைன்கள் இன்சின் மாற்ற (5, 6வது ட்ராக்) வைத்திருக்கிறார்கள். இடைப்பட்ட 4வது பிளாட்பார்மில் அதிக அளவிலான இடம் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. இது பயணிகள் புழக்கத்தில் இல்லாதது.
ஒருவேளை எதிர்காலத்தில்… என்ற ரீதியில் வைக்கப் பட்டுள்ளது… ஆனால் இந்த அளவு அதிக அளவிலான இடம் இந்த பிளாட்பாரத்தில் தேவையில்லாதது. இந்த இடத்தில், இரண்டு லைன் அமைக்கப் பட்டு ஒரு பிட் லைன் போட்டிருக்கலாம். ஆனால் கோட்டை விட்டுவிட்டார்கள்.
இப்போது கட்டப்பட்டிருக்கும் 4வது பிளாட்பார்மை இடித்து விட்டெல்லாம் செய்ய முடியாது என்ற சூழல்!
எனவே ரயில்வே நிர்வாகம், செங்கோட்டை – பகவதிபுரம் செல்லும் நீட்டிக்கப்பட்ட பகுதியில் பிட் லைன் அமைத்து, குடியிருப்புகளை மீண்டும் புத்துயிர் ஊட்டி, இங்கே விரைந்த சரக்கு போக்குவரத்துக்கும் வழி செய்ய வேண்டும்.
செங்கோட்டை ரயில் நிலையத்தின் பழைய படங்கள்…

செங்கோட்டை ரயில் நிலையத்தில்… மீண்டும் பிட் லைன் வசதி ஏற்படுத்தப் படுமா?! என்ற நமது 2021ம் ஆண்டின் பதிவு… அதில் இருந்து…
தற்போது செங்கோட்டை – திருநெல்வேலி, செங்கோட்டை – விருதுநகர், செங்கோட்டை – புனலூர் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. இவற்றில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி, மதுரை பாதைகளில் மின்சார எஞ்சினில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புனலூர் பாதையில் சோதனை ஓட்டம் முடிந்தும், மின்சப்ளை பிரச்னை காரணமாக செங்கோட்டை – புனலூர் பாதையில் தற்போதும் டீசல் எஞ்சினில் தான் ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் புனலூர் ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்து பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்த தகவல்…
செங்கோட்டை ரயில் தட மின்மயமாக்கல் டிராக்ஷன் சப் ஸ்டேஷன் துவக்குவதில் தாமதம்!
நேற்று 05.07.24 வெள்ளி மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்பாதை ரயில்களை இயக்குவதற்கான புதிய டிராக்ஷன் சப் ஸ்டேஷனில் தெற்கு ரயில்வே மதுரை டிபுடி சீஃப் இன்சினியர் மின்மயமாக்கல் – ரோஹன், பிரதீப் நட்டாலியா துணை பொதுமேலாளர் விக்ரான் கம்பெனி, தானே ஒப்பந்ததாரர் செங்கோட்டை -புனலூர் தடம் மின்மயமாக்கல், தமிழக மின்வாரிய திருநெல்வேலி வட்ட தலைமைப் பொறியாளர் செல்வராஜ் மற்றும் தென்காசி செங்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு சோதனைகள் செய்தனர் .
இவற்றில் தமிழக மின்வாரியம் இந்த டிராக்ஷன் சப் ஸ்டேஷனில் அமைத்த பொறியியல் பணிகள் செவ்வனே செய்யப்பட்டதால் அவை இறுதி செய்யப்பட்டன. ஆனால் ரயில்வே ஒப்பந்ததாரரின் பணிகளில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த சோதனை நேற்று இரவு 11 மணி வரை நீடித்தது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும் என தெரிகிறது என, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலர், பொறியாளர் KH கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் ராமன், எலக்டிரிகல் இன்சினியரிங்கில் பட்டய பொறியாளரான PRO ராமன் கலந்து கொண்டார். அவர் கூறியபோது, டிராக்ஷன் சப் ஸ்டேஷனில் ஒப்பந்ததாரர் எர்திங் பாய்ண்டுகளை பல்வேறு பகுதிகளில் சரியாக அமைக்கவில்லை என்று இந்த ஆய்வின்போது தெரிய வந்தது. பல இடங்களில் சிறிய கோளாறுகள் இருந்தன. நாளைக்குள் 07.07.24 இந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டு டிராக்ஷன் சப் ஸ்டேஷன் தனது பணிகளை துவங்குவதற்கான ஆணை ரயில்வே நிர்வாகத்தால் பிறப்பிக்கப்படும்…” என்றார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே, ஜூலை 6ம் தேதி சனிக்கிழமையே கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, செங்கோட்டை ரயில் நிலைய ட்ராக்ஷன் சப்ஸ்டேஷன் வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, ஜூன் 26 புதன்கிழமை அன்று, தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கௌஷல் கிஷோர், மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஶ்ரீவத்சவா மற்றும் இதர அதிகாரிகள் இணைந்து, கொல்லம் செங்கோட்டை பாதையை ஆய்வு செய்தார்கள்.
புனலூர் – செங்கோட்டை மலை வழிப் பாதையின் உறுதித் தன்மையையும், புனலூரில் மின்சார உப மின் நிலையம் மற்றும் விரைவில் மின்சார இன்ஜின் மூலம் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது குறித்தும் ஆய்வு செய்து, ஆரியங்காவு கணவாய் முன்னதாக தென்மலை போன்ற இடங்களிலும், வளைவான பகுதிகளிலும் ஆய்வு செய்தார்கள்.
தற்போது 18 பெட்டிகளுடன் இயங்கும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி மற்றும் கொல்லம் – சென்னை ரயில்களில், பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும், இந்த இரு ரயில்களையும் தற்போது அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றி இயக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தற்போது கொச்சுவேலி – கொல்லம் – செங்கோட்டை – தாம்பரம் இடையே இயங்கும் வாரம் இருமுறை குளிர்சாதன ரயிலை நிரந்தரமாக இயக்கவும், சபரிமலை பயணிகளுக்கு புனலூர் மற்றும் செங்கோட்டையில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதிகள் செய்வது குறித்தும் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் வந்த தனி ரயில்செங்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று விட்டு தென்காசி வழி புறப்பட்டு சென்றது. தென்காசி – திருநெல்வேலி மற்றும் தென்காசி – விருதுநகர் வழித் தடங்களையும் இவர்கள் ஆய்வு செய்து சென்றதாகத் தெரிகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது இயங்கும் ஒரே ஒரு பயணிகள் ரயிலான மதுரை – செங்கோட்டை – மதுரை ரயிலை, இரு மார்க்கத்திலும் இரு முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது… என்று தகவல்களைக் கேட்டுத் தெரிவித்தார் நமது நிருபர்.
புதிதாக வசதிகள் வேண்டுமானால், புதிய ரயில்கள் விடப் பட வேண்டுமானால் அதிக அழுத்தம் கொடுத்து, எம்.பிக்கள் அமைச்சரை சந்திப்பதும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுப்பதுமாக இருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த பல வசதிகளை பறித்துக் கொண்ட மதுரை கோட்ட ரயில் நிர்வாகத்திடம் என்ன சொல்லிப் போராடுவதோ?! அதற்கும் மேற்படி மல்லுக்கட்டல் தேவையோ?!