
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, ‘மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாகவும், இனி அது ‘லோக் பவன்’ என்றே அழைக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது…
ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு’ என்பது ‘மக்கள் மாளிகை, தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம்:
காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் “மக்கள் மாளிகை” என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, “ராஜ்பவன், தமிழ்நாடு” என்பது “மக்கள் மாளிகை தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை “மக்கள் மாளிகை” ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது. இது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது, மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது.
இந்தப் பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
மக்கள் மாளிகை, சென்னை-22.
– இப்படி மக்கள் மாளிகை – லோக் பவன் – எனும் பெயரிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களான எக்ஸ், பேஸ்புக் பக்கங்களிலும் ராஜ்பவன் என இருந்த பெயர்கள், லோக் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சொல்லப் போனால், இந்தப் பெயர் மாற்றத்துக்கான முதல்படி அமைத்தவர் தற்போதைய தமிழக ஆளுநரான ரவீந்திர நாராயண் ரவி. அவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் ஏற்கெனவே ராஜ் பவன் என்று இருந்தது, மக்கள் மாளிகையாகவே மாறிவிட்டிருந்தது. அதை பெயர் அளவிலும் மாற்றம் செய்திருக்கிறார் என்றே இப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்களின் பெயரை ‘மக்கள் பவன்’ என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
எனவே, இந்தப் பெயர்ப் புரட்சியானது, தமிழகத்தில் தொடங்கி நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பெயர் மற்றும் மன மாற்றத்துக்கு சென்னையே காரணமாக அமைந்ததும் நமக்குப் பெருமிதமே! காரணம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆளுநர் இல்லங்களான ராஜ்பவன் மற்றும் ராஜ் நிவாஸ் இனி, லோக் பவன் மற்றும் லோக் நிவாஸ் என பெயர் மாற்றப் படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வகையில் தேசத்துக்கு தமிழகமே வழிகாட்டியிருக்கிறது என்று சொல்லலாம்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனை ‘லோக் பவன்’ என மாற்றியுள்ளார். இந்தப் பெயர் மாற்றம், ஆளுநர் இல்லத்தை மக்களுக்கான திறந்த இல்லமாக மாற்றும் முயற்சியின் நீட்சியே எனக் கூறலாம்! இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்று நன்கு விளக்கும்!
மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து தெரிவித்தபோது, மத்திய அரசின் இந்த உத்தரவு, பிரதமர் நரேந்திர மோடியின் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய பொதுமக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. காலனிய ஆதிக்க சகாப்தத்தின் எச்சமாக உள்ள ‘ராஜ்’ என்ற சொல்லை அகற்றி, மக்கள் சார்ந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளது.
ஆனால் வழக்கம்போல் சண்டைக் கோழியாக அரசியல் செய்து கொண்டிருக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை விமர்சனம் செய்துள்ளார். பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை என்று அவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அண்மைக் காலமாகவே தமிழக ஆளுநர் மாளிகைகளில் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. முன்னர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோதும் சரி, தற்போது ரவீந்திர நாராயண் ரவி ஆளுநராக இருக்கும் போதும் சரி, ஆளுநர் மாளிகையில் பல்வேறு கலை இலக்கிய தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன. இவற்றில் பொதுமக்களின் பங்கேற்பும் தமிழக அறிஞர்கள் பெருமக்களின் பங்கேற்பும் இருந்தே வருகிறது. முன்பெல்லாம் ஆளும் வர்க்கத்தினருக்கும் அரசியல் தலைமைகளுக்கும் மட்டுமேயான இடமாக இருந்த ஆளுநர் மாளிகைகள் இப்போது மாநிலத்தின் கலாச்சார மொழிவழி பாரம்பரிய பங்கேற்புக்கும் பிரச்சாரத்துக்கும் ஒரு களமாக அமைந்திருப்பதை நாம் கண்டுவருகிறோம். அந்த வகையில் இது மக்கள்பவன் என்று பெயரளவில் மட்டுமல்ல, செயல்பாட்டிலும் இருந்து வருவது, மக்களாட்சியின் மாண்பை, விரிவாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
மக்களாட்சியின் அடையாளமாக மக்கள் மாளிகையாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டது. ஆனால் ஒரு குடும்ப மாளிகையாக இருக்கும் ஒரு கட்சியின் செயலகமாகத் திகழும் அரசுத் தலைமைச் செயலகம், எப்போது மக்கள்மன்ற செயலகமாக மாற்றம் காணப் போகிறது?




