
குற்றப் பின்புலம் உள்ளவர்கள் அரசியலில் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வருகிறது. சமூக சிந்தனையாளர்கள் அது பற்றிப் பேசி வந்திருக்கிறார்கள். எழுதியும் வந்திருக்கிறார்கள். எல்லாமே காகிதத்தோடும் காற்றறோடு போய்விட்டது. இப்போது இதில் ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை வருமா என்று எதிர்பார்த்தபோது அதற்கும் வழியில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது.
அஸ்வின்குமார் உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்துள்ளா£ர். குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டவர்கள் அரசியல் கட்சிகள் நடத்துவது தடுக்கப்பட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு கோர்ட் உத்தரவுப்படி பதில் அளித்துள்ள மத்திய அரசாங்கம் அப்படி ஒரு தடையை விதிக்க முடியாது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின்படி சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற அமைப்புகள் தொடங்கப்படுவதைத் தடுக்க முடியாது என்று சொல்லியுள்ளது.
இந்தப் பொதுநல வழக்கின் தீர்ப்பு இனிதான் வெளிவர வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசாங்கமும் வேறு மாதிரியான பதில் தாக்கல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அராங்கம் என்பதே அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காகத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அமைப்புதான். எல்லாக் கட்சிகளிலும் ஏற்கெனவே சில குற்றவாளிகள் இருக்கிறார்கள், மேலும் பல குற்றவாளிகள் சேரக்கூடும் பலரது குற்றங்களை எளிதில நிரூபித்துவிட முடியாது என்பது சரி, ஆனால் தண்டணைப் பெற்றவர்கள் குற்றவாளகள்தானே, அவர்கள் அரசியல் கட்சிகள் நடத்துவது நியாயமா என்று பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள வழக்கு பொருள் பொதிந்தது. ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது என்ற கசப்பான உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.
தொடக்காலத் தேர்தல் வரலாற்றில் பணம் மட்டும்தான் தேவைப்பட்டது. அடுத்த கட்டத்தில் பணத்துடன் தொண்டர் படையும் தேவைப்பட்டது. மூன்றாம் கட்டத்தில் தான் குற்றவாளிகள் நுழைந்தார்கள். அடுத்த கட்டத்தில் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். ஆட்சிக் காலத்தில் சொந்த கட்சியினர் மீதும் எதிர்க்கட்சியினர் மீதும் கோபப்பட்டார்கள்.
பெரிய தொழிலதிபர்கள் பெரிய வியாபாரிகளிடம் எல்லாக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் நேரடியாகவோ, நிழலாகவோ தொடர்பு கொண்டு தேர்தல் நிதி கறந்தார்கள். நடுத்தட்டு வியாபாரிகள் தொழிலதிபர்களிடம் பணம் கறக்க ரவுடிகள் தேவைப்பட்டார்கள் கட்சியின் நடுத்தட்டு உறுப்பினர்கள் ஏதேனும் ஆதாயம் பெறவும் இந்த ரவுடிகளே உதவி வருகிறார்கள். இந்த நிதி மூலத்தை நிறுத்த எந்த அரசியல் கட்சியும் முன்வராது. அதனால் ரவுடி வேலைகளே கட்சிகளின் ரத்த ஓட்டம் என்றாகிவிட்டது.
பொதுநல வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அரசாங்கக் கோழி முட்டை அம்மியையும் உடைக்கும் எனவே பொதுநல வழக்கின் வாதங்கள் நீர்த்துப் போகலாம். அதாவது குற்றமற்றவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்றபடியான மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகலாம். அப்படியானால் இனி இருண்ட கால ஆட்சிதான என்று கேட்டால் அதற்கு வளரும் தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.
எது எதற்கெல்லாமேம ஒன்று கூடும் இளைஞர்கள் நாட்டில் நல்லாட்சி நடைபெற குற்றப்பின்புலம் இல்லாத தலைவர்களும் தொண்டர்களும் தேவை என்பதை உணர்ந்து நடந்து கொண்டால் அது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் அரசாங்கம் என்பதே அரசியல்வாதிகளுக்குத்தான் என்ற இன்றைய அவல நிலையை மாற்றிவிட முடியாது. அரசியல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே அதிக வித்யாசம் இல்லாமல் போனால் அதை ஜனநாயகம் என்று சொல்ல முடியுமா? தங்கள் வாழ்க்கை இருளிலா, ஒளியிலா என்பதை இளைஞர்கள் தீர்மானிக்கட்டும்.
- ஆர். நடராஜன்
(துக்ளக் இதழில் வெளியான கட்டுரை)
hindunatarajan@hotmail.com


