கேரளா பாதிரியார்கள் விவகாரம். கட்டப்பஞ்சாயத்தில் கப்சிப் என முடிக்கப் பட்டால் அது சட்டத்தின் ஆட்சிக்கே தலைக்குனிவு.!
5 பாதிரியார்கள், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது சாதாரண குற்றச்சாட்டே அல்ல. பயங்கரமான கிரிமினல் வழக்கு தொடர்பானது.
சர்ச் கமிட்டி விசாரணை நடத்துகிறது என்று கிறிஸ்த்துவ மிஷனரி சொல்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் கணவனோ, புகாரை திரும்பப் பெறுமாறு தன்னை டயோசிஸ் நிர்வாகம் மிரட்டுவதாகக் கூறுகிறார். ஆனால் எந்தத் தரப்பும் இதுவரை போலீசாரிடம போகவில்லை.
இந்த விஷயத்தில் பல சந்தேகங்கள் களையப்பட்டு உண்மை வெளிவந்தே தீர வேண்டும். பலாத்காரம் நடக்காமல் பெண்ணும் கணவனும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்களா என்பது ஒரு கோணம்.
இன்னொரு கோணம், பலாத்காரம் உண்மையிலேயே நடந்திருப்பது. மூன்றாவது கோணம், பெண்ணின் சம்மதத்தோடு பாதிரியர்கள் உறவு வைத்துக் கொண்டு பின்னாளில் ஏதாவது பிரச்னை வெடிக்க பெண்ணின் தரப்பு வெகுண்டு எழுந்ததா என்பது.
இப்படிப்பட்ட நிலையில் சர்ச் கமிட்டி விசாரணை, முடிவு என்பதெல்லாம் ஒரு கிரைம் மேட்டரில் அவர்களே தீர்மானிக்கும் செயல். சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டவர்கள் வந்தே தீரவேண்டும். பாலியல் பலாத்காரம் நடக்காமல் பெண்ணின் சம்மதத்துடன் பாதிரியார்கள் உறவு கொண்டிருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது.
ஐபிசி செக்சன் 497ன்படி ஒருத்தனுக்கு மனைவியாக இருக்கிறவள் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவளுடன் உடல் உறவு வைத்துக் கொண்டால், அந்த ஆணுக்கு சட்டப்படி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். உறவு வைத்துக்கொண்ட பெண் குற்றவாளியாகக் கருதப்படமாட்டார்.
அடுத்து, இங்கே முக்கியமான விஷயம், இந்த உறவு பற்றி, பெண்ணின் கணவன் மட்டுமே ஐபிசி 198 (1) (2) ஆகிய பிரிவுகளில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும்.வேறு யாரும் புகார் கொடுக்க முடியாது.
2016 ஆண்டு ஜுன் மாதம் 15ந்தேதி, கேரளா உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு இந்த விவகாரத்தில் முக்கியமாகப் பார்க்கப்படும். பெண்ணின் கள்ள உறவு பற்றி அவள் கணவனைத் தவிர வேறு யாரும் புகார் தர முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
இங்கே 5 பாதிரியார்கள் விவகாரத்தில், சம்மந்தப் பட்ட பெண்ணின் கணவரே புகார் கொடுக்கிறார். எங்கே இடிக்கிறது என்றால், சர்ச்சிடம் கொடுத்த புகாரை அவர் இன்னும் போலீசாரிடம் கொடுக்கவில்லை என்பதுதான்! இந்த முக்கியமான கட்டத்தில்தான் கேரள சர்ச் பாலியல் முறைகேடுகளில் திக்கித் திணறுகிறது அப்பட்டமாகத் தெரிகிறது.
தேசிய மகளிர் ஆணையம், பாதிரியார்கள் பாலியல் பலாத்கார விவகாரத்தை விசாரிக்கும்படி கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. புகார் கைக்கு கிடைக்காமல் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று கேரளா போலீஸ் விழித்துக் கொண்டிருக்கிறது.
ஒரே வரியில் சொன்னால். எல்லாம் அந்தக் கணவன் கையில்! கனவான் கையில்!!
– ஏழுமலை வேங்கடேசன்