பிரசந்த சந்த்ர மஹலாநோபிஸ், இந்திய அறிவியல் மேதையான இவர் அறிவியலின் பல்வேறு துறைகளையும் புள்ளியல் கோட்பாட்டுடன் இணைத்தவர். பொருளாதாரம், இயற்பியல், வேளாண்மை, பயிர் உற்பத்தி, மக்கள்தொகை ஆராய்ச்சி, நுகர்வுத் தன்மை என பலவற்றையும் கணித ரீதியில் புள்ளியல் கோட்பாட்டுடன் இணைத்து, அறிவியல் ரீதியான கணிப்புகளை, முடிவுகளை எடுக்க வழிகாட்டியவர்.
இன்று பி.சி.மஹலாநோபிஸின் பிறந்த நாள். கடந்த 1893ல் ஜூன் 29ஆம் தேதி வங்கத்தின் கோல்கத்தா நகரில் பிறந்தவர் மஹலாநோபிஸ். இன்று அவரது 125வது பிறந்த நாள் என்பதால், மத்திய அரசு அவரது நினைவைப் போற்றும் விதமாக சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
1972 ஜூன் 28ஆம் தேதி தனது 78வது வயதில் காலமான மஹலாநோபிஸ், தன் பெயரில் ‘மஹலாநோபிஸ் மாடல்’ என்ற ஒரு கோட்பாட்டையே விட்டுச் சென்றுள்ளார். பிரிட்டிஷ் அரசின் விருது, ராயல் சொஸைட்டி ஃபெலோஷிப் விருது, பாரத அரசின் பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
இந்தியக் கணிதவியலில் தனியிடம் வகித்தவர். கணிதப் புள்ளியியல் துறையில் மஹலாநோபிஸ் செய்த ஆய்வுகளும் முடிவுகளும் இன்றளவும் மாணவர்களுக்கும் துறை சார் ஆய்வாளர்களுக்கும் பெரும் உதவி புரிகின்றன. இந்தியப் புள்ளியியல் நிறுவனம் இவர் பெயரில் சிறப்பாக திகழ்கிறது. புள்ளியியல் துறைக்கு இவர் ஆற்றிய பணிகளை நினைவு கூரும் விதமாக, கூகுள் தனது தேடல் பக்கத்தில் கூகுள் டூடுலாக பிசி.மஹலாநோபிஸின் ஆய்வுகளின் சாராம்சத்தை வைத்து பெருமை சேர்த்திருக்கிறது.