சபரிமலை விவகாரத்தில், எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த நாளாகவே காண முடிகிறது. காரணம், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அணுகிய விதம், வழக்கை தொடுத்தவர் பின்னணி, உள்நோக்கம், சபரிமலை மீதான நம்பிக்கையாளர்களின் உள்ளுணர்வு இவற்றை உணராமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உணர்வுரீதியான பிரச்னைக்கு அறிவு ரீதியான அணுகுமுறையில் தீர்ப்பை அளித்திருப்பதுதான்.
பொதுவாக மதம் என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப் படுவது. எல்லா மதங்களுக்குமே அடிப்படை, அவற்றில் உள்ள நம்பிக்கைகள்தான்! இந்து மதத்தில் உள்ள நம்பிக்கைகள், வேத இதிகாச புராணங்களில் இருந்து தொடங்கி, அந்த அந்த மண் சார்ந்த தகவல்கள், கதைகளில் வந்து முடிகிறது. அதனால்தான், ஒரே ஒரு அடிப்படைக் கருத்தை வைத்துக் கொண்டு, கிளைக் கதைகளின் மூலம், தல புராணங்கள் அமைகின்றன. அவற்றின் அடிப்படையில் அந்த அந்த தலத்துக்கு என்றும், மக்களின் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்பவும் வழிபாடு அமைகிறது.
விநாயகர் இந்த ஆலயத்தில் இங்குதான் இருப்பார் என தீர்மானிப்பவை ஆகமங்கள். ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறம் விநாயகர் என்பது ஆகமத்தால் எழுதப் பட்ட விதி. அப்படிக் கூடாது, கோயிலின் வலப்புறத்தில் தெற்கில் மேற்கு நோக்கி வைக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுத்தால், நீதிமன்றம் எப்படி அணுகும்?
விநாயகருக்கு அருகம் புல் போடக் கூடாது, இனி துளசி இலைகளால்தான் பூஜை செய்ய வேண்டும் என்று ஒரு ஆலய அதிகாரி கட்டளை இட்டு, அதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் அது எத்தகைய தீர்ப்பை அளிக்கும்? அப்போது என்ன பதிலைச் சொல்லும்..?
தலபுராணங்களின் அடிப்படையில் ஆலயங்களில் பூஜை முறைகள் வேறுபடும். அவற்றை பொதுவான நோக்கில் நாம் கேள்வி கேட்க இயலாது. அந்த ஆலயத்தின் மீதான நம்பிக்கையில் இருப்பவர்கள் அதன்படி அவற்றை அணுகுகிறார்கள். அந்த நடைமுறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றுக்குச் செல்வதில்லை!
பூஜை நடைமுறைகள், ஆகம விதிகளுக்கு உட்பட்டவை. ஆகமத்தில் எழும் கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றம் இடமல்ல! அதற்கு ஆகமப் பெரியவர்கள் அல்லது ஆன்மிகக் கூட்டமைப்பு தேவை! கோயில்களில் இரு தரப்பினர் உரிமை கொண்டாடும்போது, அவற்றால் எழும் பதற்றத்தைத் தவிர்க்க நீதிமன்றம் தலையிடுகிறது.
காரணம், கோயில் நிர்வாகக் கட்டமைப்பில் வருவதால்! ஆனால், சபரிமலை விவகாரம், நிர்வாகக் கட்டமைப்புமல்ல, இரு தரப்பு தகராறுமல்ல, பாதிக்கப் படும் நபர் என எவரும் இல்லை, இங்கே பெண்கள் சென்றுவந்து திடீரென நிறுத்தப் பட்ட உரிமை நசுக்குதலும் இல்லை! வழக்குப் போட்டவர், போடத் தூண்டியவர் எவருமே, சபரிமலையுடம் சம்பந்தப் படாதவர்கள் எனும் போது, அதனை கருத்திக் கொள்ளக் கூடவா உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மெய்யறிவு புலப்படாமல் போயிற்று!
நம்பிக்கை என்பதே மூடத்தனம், இதில் தனியாக மூடத்தனம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்பார் கண்ணதாசன். அப்படி இந்து மத நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கை என்று சுட்டிக் காட்டுபவர்கள், அறிவார்ந்த ரீதியில் சிந்திப்பதாகக் கூறுவார்கள்.
ஆனால், அறிவுக்கும் மனதுக்கும் எப்போதுமே ஒட்டாதுதான்! அறிவு சொல்வதை மனது கேட்காது. மனதுக்கு சரி எனப் படுவது அறிவுக்கு சரியாக வராது. மதம் துவக்கத்தில் மனது சார்ந்து இயங்கி, அதன் மூலம் உண்மைத் தெளிவை அறிந்து இறை நிலையை அடைகிறது என்பது அனைத்து ஹிந்து சமயங்களின் தத்துவம்.
நீதிமன்றம் அறிவார்ந்த விஷயங்களில் மட்டுமே தலையிட வேண்டும். மனம் சார்ந்த விஷயங்களில் அறிவைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மனம் சார்ந்த விஷயங்களுக்கு இபிகோ., தீர்வாகாது. இந்தத் தெளிவு இருந்தால் உச்ச நீதிமன்றம் சபரிமலை குறித்த வழக்கையே கையில் எடுத்திருக்காது.
சபரிமலை தலபுராணமும் ஐயப்பன் என்ற தெய்வ அவதாரத்தின் வாழ்க்கையும் பருவப் பெண்களை தன்னிடம் இருந்து விலக்கி வைத்திருக்கிறது. விநாயகர், அனுமன் என பிரமசாரிக் கடவுள்களைக் காட்டும் அதே புராணங்கள்தான், ஐயப்பனையும் அவ்வாறே காட்டுகிறது. இது ஐயப்பன் எனும் கடவுள் அவதாரம் எடுத்த முடிவு!
அந்த முடிவில் நாம் தலையிட முடியாது! ஐயப்பன் தர்மசாஸ்தாவின் அவதாரமாகக் கருதப் படுகிறார். தர்மசாஸ்தாவுக்கும் பூலோக அவதாரத்துக்கும் தொடர்பில்லை. இது தேவலோக புராணத்தில் வருவது.
ஆனால், பூலோகத்தில் அவதரித்த வரலாற்றுக் கால ஐயப்பனின் அவதாரக் கதைப் படி, தான் அவதரித்த வேலை முடிந்ததும் தாம் சபரிமலையில் கோயில் கொள்வதாகக் கூறி, சாஸ்தாவின் சந்நிதியில் மறைந்துவிடுகிறார். தான் திருமணம் செய்து கொள்ளாமல் நித்ய பிரம்மசாரியாக இருந்து பக்தர்களுக்கு அருள் புரிவேன் என்று கூறுகிறார்.
இந்த புராணச் சிறப்பை ஒட்டிதான் சபரிமலை சிறப்பான தலமாக பேர் பெற்றது. இதனை நம்பாதவர்கள், சபரிமலைக்கு வரவேண்டிய தேவையில்லை. அதற்கு பதிலாக ஒரு அருங்காட்சியகத்துக்குச் சென்று வெறும் சிலைகளாகவே பார்வையிடலாம். அதற்கு யாரும் தடை செய்யவில்லை. தலத்துக்கான சிறப்பைச் சிதைப்பது, தல இறைவனுக்குச் செய்யும் துரோகம்.
ஒரு தெய்வத்தின் தலத்தில் பாலின பாகுபாடா என்று கொதிப்பவர்கள், இட ஒதுக்கீடு பாலின பாகுபாட்டை கடைப்பிடிப்பதை எதிர்க்க வேண்டும் அல்லவா? பேருந்துகளில் ஏன் பெண்கள் என்று இருக்கைகள் குறிப்பிட்டு ஒதுக்க வேண்டும்! பாலின சமத்துவம் இல்லாமல் போகிறதே! பெண்கள் ஸ்பெஷல் என்று ஏன் புறநகர் ரயில்கள்? அப்போதே சமத்துவம் அடிபட்டுப் போகிறதே!
ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் குழத்துபுழை குழந்தையாகப் பிறந்து காட்சி தரும் தலம். ஆரியங்காவில் தனித்து காட்சி தந்தாலும், தன் மீது சௌராஷ்டிரப் பெண் வைத்த பக்தியினால் தன்னிடம் ஐயப்பன் அழைத்துக் கொண்டார் என்பதால், அவருக்கு திருமண நிகழ்வையும் நடத்தி அழகு பார்க்கிறார்கள் அன்பர்கள்.
அச்சங்கோவிலில் வன ராஜனாக ஐயப்பனின் கோலம். எல்லாம் முடிந்து சபரிமலையில் யோக வடிவாக தவம் புரியும் கோலத்தில் சாஸ்தாவிடம் ஐக்கியமான தலம். அங்கே தான் தனித்திருக்கும் தன்மையை ஐயப்பன் தன் விருப்பமாக உறுதி செய்கிறார்.
மற்ற எல்லா கோயில்களுக்கும், அவை வனத்தில் இருந்தாலும் இங்கே பெண்கள் வரலாம். தரிசனம் செய்யலாம். அம்பலம் எனப் படும் கருவறையின் அருகே செல்ல அனுமதி இல்லையே தவிர, பெண்களும் சிறுவர்களும் அதற்கு முன் உள்ள மண்டபம் வரை வந்து வணங்கலாம். கேரள கோயில் கலாசாரப் படி, ஆண்களும் மேல்சட்டை அணியாமல் கருவறை அருகே வர வேண்டும் என்பது உடைக் கட்டுப்பாட்டு நியதி.
எனவே பெண்களின் மாதவிடாய் பிரச்னை, சமத்துவமின்மை, பெண்களால் இயலாது, பெண்களுக்கான பாதுகாப்பு காரணமாகவே தடை என்பன போன்ற வறட்டு வாதங்களை விட்டுவிட்டு, சபரிமலை ஐயனின் வாக்கை மட்டுமே சபரிமலை மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஏற்பார்கள். அதையே உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்!
இத்தகைய முறையற்ற வழக்கை எடுத்துக் கொண்டு காலவிரயத்தையும், சமூகப் பதற்றத்தையும், உச்ச நீதிமன்றமும் கேரள கம்யூனிஸ அரசும் ஏற்படுத்தியிருப்பது விமர்சிக்கத் தக்கதே!
பெண்களையும் அனுமதிக்கலாமே என்ற அறிவார்ந்த ரீதியில் சிந்திப்பதற்கு பதிலாக, இத்தகைய தீர்ப்பினால் நாட்டுக்கு என்ன நன்மை, என்ன தீமை, பிற்காலத்தில் எத்தகைய விபரீத கேள்விகள் இதனால் எழும் என்றெல்லாம் அறிவார்ந்த ரீதியில் உச்ச நீதிமன்றம் சிந்தித்திருக்க வேண்டும்!
ஐந்து நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண் என்பது இந்த வழக்கில் ஒரு மோசடி! நியாயப் படி, நான்கு நீதிபதிகள் இருந்து இருவர் பெண்களாக இருந்திருக்க வேண்டும்! அல்லது பெண்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து விவாதிக்கும்படி, பெண் நீதிபதிகளிடம் விட்டிருக்க வேண்டும்!
சினிமாக்களிலேயே கூட பெண்கள் பாடும் டூயட்டையும் தனிப் பாடலையும் ஆண் கவிஞர்கள் எழுதுவதே செயற்கையானது, இயல்பான பெண்ணியம் இல்லாதது எனும் போது, பெண்கள் எப்படி சிந்திப்பார்கள் என்பதை ஆண் நீதிபதிகளும் செயற்கையாகத்தான் சிந்திக்க முடியும். அப்போது அதில் எங்கே நீதி வருகிறது?! திணிக்கத்தானே படுகிறது!
– செங்கோட்டை ஸ்ரீராம் (பத்திரிகையாளர்)


