அரசியலமைப்புச் சட்டத்தின் தினம்

Published:

constitution day - 2026

நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. 26/11/2018 இந்திய அரசியலமைப்பு (Constitution Day) தினமாகும். 26/11/1949அன்று இந்திய அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளை ஏற்று நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதிப்படுத்தப்பட்டு நமக்கு நாமே ஏற்றுக் கொண்ட நாள்.

09/12/1946இல் இதற்கான வேலைகள் துவங்கப்பட்டு இன்றைக்கு (26/11/2018) இதே நாளில் ஏற்கப்பட்டது. மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும், வேட்கைகளையும் என அனைத்து எண்ணப்பாடுகளையும் ஒருமுகமாக பிரதிபலிப்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அன்றைய வைசிராய் லார்ட் மவுன்ட்பேட்டன் ஒருங்கிணைந்த இந்தியா என்பது தற்போதைய இந்தியாவாக பிரிக்கப்படுகிறது என்று 3/6/1947இல் அறிவித்தார். அதனால் இந்தியா தனக்கான அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் 296 உறுப்பினர்கள் அப்போது இடம் பெற்றார்கள். அப்போது அந்த குழுவில் டாக்டர். அம்பேத்கர் இல்லை.

இவர்களில் கிழக்கு வங்கத்தை சார்ந்தவர் யோகேந்தரநாத் மண்டல் என்பவர் வெளியேறியதால் அவருடைய இடத்தில் அம்பேத்கர் இடம்பெற்றார். நமது அரசியல் சாசனம் சமஷ்டியா? ஒற்றை ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பி.என்.ராவ் என்பவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.

ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜி இருந்தார்.

அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ் மற்றும் முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர். கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை.

அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது.

நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.

அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது.

வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப் பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.

இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.

இதுகுறித்து பல பத்திகள் தினமணி, தி இந்து போன்ற நாளேடுகளில் எழுதியுள்ளேன். இருப்பினும் இதுகுறித்தான சிந்தனைகளையும், பிரச்சனைகளையும் இந்த ஒரு பத்தியில் அடக்கிவிடமுடியாது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், எனக் கொண்ட பன்மையில் ஒருமை என்ற அடிப்படையில் பல வட்டாரங்கள் இணைந்து வாழ்கின்றோம்.

சமஸ்டி அமைப்பின் வேகத்தையும் தாக்கத்தையும் மத்தியில் ஆளும் மத்திய அரசு உணரவேண்டும்.

மாநிலங்களுக்கிடையே பாரபட்சமில்லாமல் சம உரிமைகளோடு, மாநில சுயாட்சி பெற்றிடும் வகையில் நம்முடைய பணிகளும், நம் அணுகுமுறைகளும் இருக்கவேண்டும்.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இந்திய #அரசியலமைப்புசட்டத்தை வடிவமைத்து உயிரோட்டமான ஜீவனாகநாட்டுக்கு அர்ப்பணித்தார் !

#இந்தியஅரசியலமைப்புசட்டம் வெறும் எழுத்து வடிவம் இல்லை நம்முடைய உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிபடுத்துகின்ற பிரகடனமாகும் .

இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை பல நாள் அமர்ந்து விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தி வடித்தெடுக்கப்பட்ட அரசியல் சிற்பம் தான் நம் அரசியல் சாசனம்

டாக்டர் அம்பேத்கரோடு இணைந்து அந்திராவை சேர்ந்த அறிஞர் பி.என்.ராவ் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரசியல் அமைப்பு சட்டங்களை எல்லாம் அறிந்துகொண்டு அதை நம்நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் செய்து இந்திய அரசியல் சாசனம் எழுத பெரும் பங்காற்றினார்!

அவர் இல்லையென்றால் பெரும் சிரமம் ஏற்பட்டு இருக்கும் திரு பி.என் ராவ் அவர்கள் மறைக்கப்பட்ட மாமனிதர்களில் ஒருவராவார்

இந்நாளில் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை நாட்டுக்கு தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் திரு பி.என். ராவ் அவர்களையும் நினைவு கூறுவோம் !

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்கறிஞர், திமுக., செய்தி தொடர்பாளர்)

#இந்தியஅரசியலமைப்புச்சட்டம்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img