திருச்சி: தமிழ் இலக்கியங்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், தமிழிலக்கியப் படுகொலை செய்யும் வகையிலும் செயல்படும் திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த் துறையை கண்டித்தும், கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப் பட்டது.
இந்துமக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, ஆளுநருக்கு அளிக்கக் கூறி, மாவட்ட ஆட்சித் தலைவர் வழியே இந்த மனுவை அனுப்பி வைப்பதற்காக அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
பொருள்: தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடத்த திட்டமிட்ட திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி கோரிக்கை புகார் மனு
பெரு மதிப்பிற்குரிய ஐயா,
திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி கிறிஸ்தவ கல்வி நிறுவனம். இது பாதிரியார்களால் நடத்தப்படுகிறது. இதற்கு அரசினுடைய சலுகைகள் பல கோடிக்கணக்கில் நிதி கொடுக்கப்படுகிறது.
அரசு சலுகை பெற்று நடக்கக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு கல்வி நிறுவனம். வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் “பன்னாட்டு கருத்தரங்கம் ”
“தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் ”
1. தொல்காப்பியம் வரையறுக்கும் பெண் மீதான கட்டுப்பாடுகள்
2. சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்
3. சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்
4. சங்ககாலச் சமூகத்தில் கொண்டி மகளிர்
5. புறத்திணைகள் காட்டும் பெண் வன்கொடுமைகள்
6. சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறுவாசிப்பு
7. மணிமேகலை காட்டும் கணிகையர் சமூகம்
8. சீவக சிந்தாமணி எடுத்துரைக்கும் பலதார மணமுறை
9. கம்பராமாயணத்தில்
வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகள்
10 கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை சந்தித்த வன்கொடுமைகள்
11. வில்லிபாரதத்தில் பாஞ்சாலி சந்தித்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள்
12. தனிப்பாடல்களில் வேசியர் ஏசல்
13. நீதி நூல்கள் திணிக்கும் பெண்ணடிமை சிந்தனைகள்
14 பெண் கதை மாந்தர்கள் வழி பழங்கதைகள் கட்டமைக்கும் பெண்ணடிமைத்தனம்
15. சமயங்கள் மறுக்கும் பெண்ணின் அடையாளங்கள் பெண்ணின்
16 உலா இலக்கியங்கள் கட்டமைக்கும் காமம்
17. நாட்டுப்புறப் பாடல்களில் காணலாகும் பெண்ணடிமை சிந்தனைகள்
18 குறவஞ்சி இலக்கியங்கள் வெளிப்படுத்தும்
19 பெண்களை பழித்துரைக்கும் பட்டினத்தார் பாடல்கள்
20 மாதவையாவின் முத்து மீனாட்சி புதினம் சித்தரிக்கும் பெண் வன்கொடுமைகள்
21. புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” கேள்விக்குள்ளாகும் கற்புக் கோட்பாடு
22. தி.ஜானகிராமனின்
“மரப் பசு” புதினத்தில் பெண் சுதந்திரம்
23 . ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கண்டிக்கும் பாலியல் வன்முறை
24. வைரமுத்துவின் கவிதைகளில் முதிர்கன்னிகள் குறித்த பதிவுகள்
25 சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் சித்திரிக்கும் பெண் தொழிலாளிகள் மீதான வர்க்க ஒடுக்குதல்கள்…
இப்படி 40க்கும் மேற்பட்டத் தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மேற்படி கல்லூரி நிர்வாகம் இந்து சமய இலக்கியங்களை கம்பராமாயணத்தை வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தவறான வரலாறுகளை ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க செய்து அதை ஆவணப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இது இலக்கியத்தில் எழுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து உண்மை வரலாறுகளை அழிக்கக்கூடிய வேலையை இந்த கல்லூரி நிர்வாகம் செய்து வருவது என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இது மத மோதலை உருவாக்கும் .
ஒரு இந்து தன்னாட்சி பெற்ற கல்லூரி நிர்வாகம் உதாரணத்திற்கு மறுவாசிப்பு பைபிளில் பெண்ணடிமைத்தனம்; இயேசு இறப்பில் சந்தேகம்; கன்னிமரியாள் எப்படி கருத்தரித்தாள் ? பாதிரியார்களின் லீலைகள்; திருச்சபைகளில் வரக்கூடிய ண்களுக்கு ஆபத்து ; பாவமன்னிப்பு என்கின்ற பெயரில் கற்பழிப்பு… இப்படி பல்வேறு தலைப்புகளில் விவாத பொருளாக மாற்றி ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்குமா?
வேடிக்கை பார்க்காது தானே. அப்படி இருக்கையில் இப்படி ஒரு அகில உலக கருத்தரங்கை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுபோல் மதமோதல்களை உருவாக்கக் கூடிய வகையில் கருத்தரங்கம் நடத்த கூடி இந்த கல்லூரிக்கு அரசாங்கம் எப்படி நிதி உதவி செய்யலாம்?
கீழ்க்கண்ட கோரிக்கைகளை இந்து மக்கள் கட்சி சார்பில் தங்களிடம் முன்வைக்கின்றோம்.
1 . தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் என்ற தலைப்பில் தவறான விஷயங்களை ஆவணப்படுத்த முயற்சித்து கருத்தரங்கு ஏற்பாடு செய்த தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள் செல்வகுமார் பிரான்சிஸ் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது விசாரணைக் குழு அமைத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. கல்லூரி ஆட்சிமன்றக் குழு முழு அனுமதியோடு இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டதா இல்லை தனிப்பட்ட ஒரு சில பேராசிரியர்களால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதா என்பது குறித்து நேர்மையான கல்வியாளர்களைக் கொண்ட குழுவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கல்லூரியில் படிக்க வரும் மாணவர்களை போராட்ட களத்தில் இறக்கி விட்டு போராட்டக்காரர்களாக மாற்றக்கூடிய வேலையை செய்யக் கூடிய கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்
4. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் செயல்படக்கூடிய மாணவர் விடுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் விவசாய விடுதலை முன்னணி புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் நக்சலைட்டு தேசவிரோத சிந்தனையாளர்கள் கொண்ட பிற கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகள் தஞ்சம் அடைவதாக அந்த கல்லூரியில் படிக்க கூடிய மாணவர்கள் பேராசிரியர்கள் கூறுகிறார்கள் இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து மாணவர் விடுதிகளில் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தவிர மற்றவர்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்து சமூக விரோதிகள் யார் எனக் கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்
5. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் , படிக்க கூடிய மாணவர்களிடையே கிறிஸ்தவ வன்னியர் – கிறிஸ்தவ தலித் – கிறிஸ்தவ பிள்ளை என சாதிய பாகுபாடு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்
6. கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆக மதமாற்றம் வேலை செய்யக்கூடிய பேராயர்கள் அரசாங்க சம்பளம் பெறுவதற்காக பேராசிரியர் வேஷம் போடுகிறார்கள். இதுபோல் செயல்படக்கூடிய பாதிரியார்களுக்கு அரசு வழங்கக்கூடிய சம்பளப்பணத்தை ரத்து செய்திட வேண்டுகிறோம்.
7. தமிழ் இலக்கியங்களில் பெண்களின் பெருமையை போற்றக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்ற போது பெண்களுக்கு எதிரான எதிர்மறையான கருத்துக்களை ஆவணப்படுத்த முயற்சித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்த அகில உலக கருத்தரங்கை தடை செய்திடவும் இதுபோன்று கருத்தரங்கு இனி வரும் காலங்களில் எந்த கல்லூரியும் நடத்தக்கூடாது அளவிற்கு அரசு சிறப்பு சட்டத்தை உருவாக்கிட வேண்டுகிறோம்.
நன்றி
நகல்கள்
1. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை
2. மாண்புமிகு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை
3.மாண்புமிகு உள்துறை செயலாளர் அவர்கள் சென்னை
4.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, கலாச்சார துறை அமைச்சர் அவர்கள் – சென்னை
5. உயர்திரு டிஜிபி அவர்கள் தமிழ்நாடு காவல்துறை சென்னை
6. உயர்திரு பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி
7. உயர்திரு மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் திருச்சி



