அதன் பின் அவர்கள் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு படுக்கச் சென்றனர். மதன்லால் பஹ்வா தன்னிடமிருந்த இரண்டு போர்வை களையும்,விரிப்பையும் அவர்களுக்கு கொடுத்துதவினார்.
அடுத்த நாள் காலை 8.30 மணியளவில்,ஆப்தேயும்,நாதுராமும் அங்கே வந்தனர். அப்போதுதான் மதன்லால் பஹ்வா கண்விழித்திருந்தார்.
ஆப்தேயும்,நாதுராமும் முந்தைய இரவை MARINE DRIVE பகுதியிலிருந்த SEA GREEN HOTEL ( SOUTH )ல் கழித்தனர். இரவு வெகு நேரம் விழித்திருந்து என்ன செய்வது என்பதை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
அதற்கு முன் ஃபோர்ட் ஏரியா பகுதியிலிருந்த டாடா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்று, இரண்டு நாள் கழித்து ஜனவரி 17ந் தேதி பிற்பகலில்,டெல்லிக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்ய போலிப் பெயர்களில் டிக்கெட்டுகள் புக் செய்தனர்.
ஆப்தே தன்னை ‘ D.N.KARMAKAR ‘ என்றும் நாதுராம் கோட்ஸே தன்னை ‘ S.MARATHE ‘ என்றும் அழைத்துக் கொண்டனர். ஹிந்து மஹா சபா ஹாலில் ,மதன்லாலிடம்,அவரை பின்னர் சந்திப்பதாகக் கூறி விட்டு திகம்பர் பாட்கேயையும்,ஷங்கர் கிஷ்டய்யாவையும் அழைத்துக் கொண்டு,
டாக்ஸியில் ,அங்கிருந்து ஒரு மைல் தொலைவிலிருந்த ( அதுவும் தாதரில்தான் இருந்தது ), கார்கரேயின் நண்பர் G.M.ஜோஷி நடத்தி வந்த சிவாஜி பிரிண்டிங் பிரஸ்ஸுக்கு சென்றனர். பிரஸ்ஸின் வாசலில் அவர்கள்,கார்கரேயை எதேச்சையாகச் சந்தித்தனர்.
அவரை ஒரு ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று தாங்கள் செய்ய எண்ணியிருந்ததை ( காந்தியை கொலை செய்ய எண்ணியிருந்ததை ) தெரிவித்தனர். அதன் பின்,அவர்கள் எல்லோரும் ஒரு டாக்ஸியில் ஏறி ஹிந்து மஹா சபா அலுவலகத்திற்குச் சென்றனர்.
அங்கே மதன்லால் பஹ்வா,தன் படுக்கையை நன்றாகச் சுற்றி வைத்து விட்டு (ஹோல்டால் ),ஆப்தே மற்றும் நாதுராமின் வருகைக்காக காத்திருந்தார். திகம்பர் பாட்கே தன் வேலையாள் ஷங்கர் கிஷ்டய்யாவை வெளியே சென்று மாடியில் காத்திருக்கும்படி அனுப்பி விட்டார்.
மதன்லால் பஹ்வா ஹோல்டாலை தூக்கி டாக்ஸியின் மேலே CARRIERல் வைத்து விட்டு வண்டிக்குள் ஏறினார். டாக்ஸி டிரைவரை திக்ஷித் மஹராஜ் வசித்து வந்த புலேஸ்வரர் கோயிலுக்கு செல்லும்படி கூறினர்.
திக்ஷித் மஹராஜ் ஒரு விதமான சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். தன்னைக் காண வந்த விருந்தினர்களை தன் படுக்கை அறைக்கு வரும்படி அழைத்தார்.
ஆப்தே,நாதுராம்,பாட்கே மற்றும் மதன்லால் பஹ்வாவை அவர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருந்தார்.ஆனால் கார்கரேயை சந்தித்ததில்லை.
கார்கரேயை உரிய முறையில் திக்ஷித்திற்கு அவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பின் திக்ஷித் ஜி தன் வேலையாளிடம்,முந்தின இரவு பாட்கே விட்டுச் சென்ற பையை கொண்டு வரும்படி கூறினார்.
தன்னுடைய அனுமதி இல்லாமல்,அபாயகரமான பொருட்களை விட்டுச் செல்ல பாட்கே தன்னுடைய வீட்டை பயன்படுத்தியது குறித்து தன்னுடைய கோபத்தை காட்டினார் திக்ஷித் ஜி. அது போதாதென்று ,பாட்கே அங்கேயே பையிலிருந்த பொருட்களை எந்த ரகசிய உணர்வும் இல்லாது தன் நண்பர்களிடம் காட்டிக் கொண்டிருந்தது அவரது கோபத்தை அதிகரித்தது.
அவர் பாட்கேயிடம் கடுமையாக ஏதோ கூற எத்தனித்த போது,பாட்கே கையெறி குண்டை எப்படி இயக்குவது என்று விளக்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். கையெறி குண்டை எறியும் தருவாயில் ‘ STRIKER HANDLE ‘ ஐ கீழ் புறமாக அழுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதைக் கூட அறியாதிருந்ததைக் கண்டு திக்ஷித் ஜி அதிர்ச்சி அடைந்தார்.
திக்ஷித் ஜி கையெறி குண்டை பயன்படுத்தி இருக்காவிட்டாலும்,சினிமா படங்களில் அது பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறார். ‘ STRIKER HANDLE ‘ஐ விட்ட பின் குண்டை கையில் வைத்திருப்பது ,நிச்சயம் கொடூரமான மரணத்தை வைத்திருப்பவருக்கு கொடுக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தது.
‘ கையெறி குண்டின்’ SPRINGஐ கீழ் பக்கமாய் அழுத்தி வைத்திருக்க வேண்டும் ‘ என்று அவர்களுக்கு விளக்கமளித்தார். அத்தோடு,’ குண்டிலிருக்கும் பின்னை பல்லினால் கவ்வி இழுக்க வேண்டும் ‘ என்றும் கூறினார்.
மதன்லால் பஹ்வாவிற்கு கையெறி குண்டுகள் தயாரிப்பில் அனுபவம் இருந்தாலும், ஒரு ராணுவத் தயாரிப்பு கையெறி குண்டை கையாள்வது எப்படி என்று அறிந்திருக்க வில்லை.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்